தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க போலீஸ் டி.ஜி.பி. அதிரடி ஆய்வு


தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க போலீஸ் டி.ஜி.பி. அதிரடி ஆய்வு
x
தினத்தந்தி 13 July 2018 10:30 PM GMT (Updated: 13 July 2018 9:43 PM GMT)

சோரியாங்குப்பத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

பாகூர்,


பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் தென்பெண்ணை ஆறு உள்ளது. இந்த ஆற்றில் மணல் எடுக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும் பசுமை தீர்ப்பாய உத்தரவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி இரவு நேரங் களில் லாரி மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்பட்டு வருகிறது.

இதை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மணல் கடத்தல் தொடர்ந்து வருகிறது.


இந்தநிலையில், புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று காலை பாகூரை அடுத்துள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்று பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள இடுகாடு பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு போலீசாரிடம் விளக்கம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து சோரியாங்குப்பம் ஆற்று பகுதியில் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியை தீவிரபடுத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு தொடர்பான கோப்புகள் முதல் தகவல் அறிக்கை புத்தகங்களை பார்வையிட்டு வழக்குகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். மேலும் நகரம் மற்றும் கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி அறிவுத்தினார்.

தொடர்ந்து கரையாம்புத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஆற்றங்கரையையும், புறக்காவல் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, ஜெயகுருநாதன், வீரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


இங்கு ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா திருக்கனூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள், ரவுடிகளின் பட்டியல் ஆகியவற்றை பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார். பின்னர் அங்கு வந்திருந்த திருக்கனூர் பகுதி மக்களிடம் அவர் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் போலீசார் மத்தியில் பேசும்போது, குற்றச் செயல்களை தடுப்பதில் தீவிரம் காட்ட வேண்டும், ரோந்து மற்றும் கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் போலீசாருக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தன்னை (டி.ஜி.பி.) வந்து சந்தித்து முறையிடலாம் என்றும் குறைகளை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதோடு, போலீசாருக்கான மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.

இந்த ஆய்வின்போது மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story