அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்


அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 13 July 2018 10:30 PM GMT (Updated: 13 July 2018 10:30 PM GMT)

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தேனி, 

 இதற்கு மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நாடாளுமன்ற தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ளதையொட்டி, பொதுமக்கள் வாக்களித்திடும் வகையில், நகர்புறப்பகுதிகளில் 1400 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளும், கிராமப்புற பகுதிகளில் 1200 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளும், இரண்டாக பிரிக்கப்படவுள்ளது.

வாக்குச்சாவடி மையங்கள் ஏதேனும் சிதிலமடைந்து இருப்பின் அதற்கு பதிலாக புதியதாக வாக்குச்சாவடிகளும், வாக்குச்சாவடிகள் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் இருப்பின் அவற்றை மாற்றி 2 கிலோமீட்டருக்குள்ளாக புதிய வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 300 வாக்குச்சாவடிகளில் 1400 வாக்காளர்களுக்கு அதிகமாக நகர்புறப்பகுதியில் 1 வாக்குச்சாவடியும், கிராமப்புறப்பகுதியில் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ளதாக 12 வாக்குச்சாவடிகளும், வாக்குச்சாவடி அமைவிடம் மற்றும் கட்டிடம் மாற்றம் அடிப்படையில் 3 வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது.

பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 282 வாக்குச்சாவடிகளில் 1400 வாக்காளர்களுக்கு அதிகமாக நகர்புறப்பகுதியில் 8 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறப்பகுதியில் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ளதாக 6 வாக்குச்சாவடிகளும், போடி தொகுதியில் உள்ள 309 வாக்குச்சாவடிகளில் 1400 வாக்காளர்களுக்கு அதிகமாக நகர்புறப்பகுதியில் 1 வாக்குச்சாவடியும், கிராமப்புறப்பகுதியில் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ளதாக 4 வாக்குச்சாவடிகளும், கம்பம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 286 வாக்குச்சாவடிகளில் 1400 வாக்காளர்களுக்கு அதிகமாக நகர்புறப்பகுதியில் 6 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறப்பகுதியில் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ளதாக 2 வாக்குச்சாவடிகளும், வாக்குச்சாவடி அமைவிடம் மற்றும் கட்டிடம் மாற்றம், தரம் உயர்வு அடிப்படையில் 3 வாக்குச்சாவடிகளும், 2 கிலோமீட்டருக்கு மேல் உள்ளவகையில் 1 வாக்குச்சாவடியும் இருப்பது தெரியவந்தது.

இந்த வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு கருத்துகள் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) நாகஜோதி, ஆர்.டி.ஓ.க்கள் சென்னியப்பன், ஜெயப்பிரிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) தங்கவேல், தேர்தல் தாசில்தார் (பொறுப்பு) நஜீமுனிசா மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story