மொபட் மீது மோதிய லாரி பள்ளத்தில் கவிழ்ந்த


மொபட் மீது மோதிய லாரி பள்ளத்தில் கவிழ்ந்த
x
தினத்தந்தி 13 July 2018 10:48 PM GMT (Updated: 13 July 2018 10:48 PM GMT)

வேடசந்தூர் அருகே மொபட் மீது மோதிய வேகத்தில் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

வேடசந்தூர், 

தூத்துக்குடியில் இருந்து சேலத்திற்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை நெல்லையை சேர்ந்த சங்கர் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் அகரம் பேரூராட்சி அலுவலகம் அருகே லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது நான்கு வழிச்சாலையில் சென்றால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக இடையகோட்டை வழியாக கரூர் சென்று, பின்னர் அங்கிருந்து சேலம் சென்றுவிடலாம் என்று கருதிய டிரைவர், இடையகோட்டை வழியாக சென்றார். கொண்டசமுத்திரபட்டி பிரிவு அருகே லாரி சென்றபோது, முன்னால் தாடிக்கொம்பை சேர்ந்த கறிக்கடைக்காரர் கணேசன் (36) என்பவர் ஓட்டிச்சென்ற மொபட்டின் பின்பகுதியில் லாரி மோதியது.

பின்னர் மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் சங்கர் மற்றும் மொபட்டில் சென்ற கணேசன் ஆகியோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் காயமடைந்த லாரி டிரைவர் சங்கர் மற்றும் கணேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story