பெரம்பூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்


பெரம்பூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்
x
தினத்தந்தி 13 July 2018 11:07 PM GMT (Updated: 13 July 2018 11:07 PM GMT)

பெரம்பூர் பகுதியில் சாலையோரம் உள்ள கடைகள், ஓட்டல்கள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சத்துடன் செயல்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் சிறு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்தநிலையில் திரு.வி.க.நகர் 6-வது மண்டலம் 70-வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் மாதவரம் நெடுஞ்சாலை பகுதிகளில் சாலையோரம் உள்ள ஓட்டல்கள், கடைகளுக்கு முன்பு நடை பாதையை ஆக்கிரமித்து மேற்கூரைகள் அமைத்தும், நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு டைல்ஸ் கல் பதித்தும், படிக்கட்டுகள் அமைத்தும் இருந்தனர்.

மேலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் முன்பு பெயர் பலகை, விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் நடைபாதையில் செல்லவேண்டிய பொதுமக்கள் சாலை ஓரங்களிலும், சாலை ஓரத்தில் செல்லவேண்டிய இருசக்கர வாகனங்கள் சாலையின் மத்தியில் செல்கின்றன.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி கமிஷனருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நேற்று காலை உதவி பொறியாளர் சரவணன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே பெரம்பூர் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அப்போது அவர்கள், பெரிய ஓட்டல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட சிறு கடைகளை மட்டும் அகற்றி பாரபட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதி சிறு வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும். பெரிய ஓட்டல்கள், கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், யாருக்கும் இடையூறு இல்லாமல் மரத்தின் கீழ் வைத்திருக்கும் சிறு உணவகங்கள் மற்றும் தெரு ஓரமாக உள்ள கடைகளை குறி வைத்து அகற்றக்கூடாது” என்று முறையிட்டனர்.

ஆனால் சிறு வியாபாரிகளின் எதிர்ப்பையும் மீறி, போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதேபோல் பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே பிரபல உணவகங்களின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை விட்டு விட்டு பெரம்பூர் நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள திருவேங்கடம் தெருவில் உள்ள 5 சிறு உணவகங்கள் மற்றும் 2 கடைகளின் முன்பு இருந்த மேற்கூரைகள், கடைகளுக்கு முன்பு இருந்த விளம்பர பலகைகளை அகற்றிவிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாக கூறி முடித்து விட்டனர்.

முக்கிய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தெருவில் இருந்த ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளின் செயல், அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது பற்றி அந்த பகுதி சிறு வியாபாரிகள் கூறும்போது, “பெரிய ஓட்டல்கள், முக்கிய பிரமுகர்கள் 5 அடி முதல் 10 அடி வரை சாலையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஆனால் அவற்றை அகற்றாமல் விட்டு விட்டு சிறு கடைகளை குறி வைத்து அகற்றி, மாநகராட்சி அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டு உள்ளனர்” என்றனர்.


Next Story