சென்னையில் 18-ந் தேதி நடக்கிறது முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளுக்கு மாணவ-மாணவிகள் தேர்வு கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்


சென்னையில் 18-ந் தேதி நடக்கிறது முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளுக்கு மாணவ-மாணவிகள் தேர்வு கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 13 July 2018 10:15 PM GMT (Updated: 13 July 2018 11:48 PM GMT)

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளுக்கு மாணவ-மாணவிகள் தேர்வு வருகிற 18-ந் தேதி (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்கும் இட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மாணவர்களுக்கும், சென்னை, ஈரோடு ஆகிய இடங்களில் மாணவிகளுக்கும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்படுகிறது. இந்த விடுதிகளில் காலியாக உள்ள விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பயிற்சி பெற 6், 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு 2-வது கட்டமாக மாநில அளவிலான தேர்வு வருகிற 18-ந் தேதி (புதன்கிழமை) காலை 8 மணிக்கு சென்னையில் நடக்கிறது.

அதன் விவரம் வருமாறு:-

சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் டேக் வாண்டோ, நீச்சல் ஆகிய விளையாட்டிற்கு மாணவர்களும், ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளம் ஆகிய விளையாட்டிற்கு மாணவ -மாணவிகளும், டேபிள் டென்னிஸ் விளையாட்டிற்கு மாணவிகளும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் இறகுப்பந்து விளையாட்டிற்கு மாணவ -மாணவிகளும், சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் டென்னிஸ் விளையாட்டுக்கு மாணவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எனவே விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ -மாணவிகள் சேர்க்கைக்கு உரிய படிவங்களை அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அதிகாரிகளை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி (பொறுப்பு) நோயிலின் ஜானை தொடர்பு கொள்ளலாம்.

தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 18-ந் தேதி காலை 8 மணிக்குள் தேர்வு நடைபெற உள்ள இடங்களில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.

Next Story