நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது


நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 14 July 2018 10:30 PM GMT (Updated: 14 July 2018 10:48 PM GMT)

நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அந்தியூர்,

அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கடந்த 8-6-2018 அன்று கெட்டிசமுத்திரம் ஏரி பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தன்னுடைய மோட்டார்சைக்கிளை ரோட்டில் நிறுத்திவிட்டு ஏரியில் குதித்து தப்பி ஓட முயன்றார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் ஓடிச்சென்று அந்த நபரை பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், ‘அவர் ஈரோடு மோளப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பதும், மளிகை கடை மற்றும் நிதி நிறுவனம் ஆகியவற்றின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், பல பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும்,’ தெரியவந்தது. போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், ‘மணிகண்டன் மீது ஈரோடு, அந்தியூர், பவானி, வெள்ளித்திருப்பூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டதாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்ததும்,’ தெரிய வந்தது.


இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பரிந்துரை செய்தார்.

அவருடைய பரிந்துரையை ஏற்று, மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் மணிகண்டன் கைது செய்யப்பட்ட உத்தரவு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.

Next Story