காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் 25 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது


காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் 25 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 16 July 2018 10:45 PM GMT (Updated: 16 July 2018 7:00 PM GMT)

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தால், 25 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மண்டியா,

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ளது, கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணை. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தப்படி இருந்தது. நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 123.85 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த வெள்ளம் காரணமாக காவிரி ஆற்றங்கரையொட்டி ஸ்ரீரங்கப்பட்டணா, பாண்டவபுரா தாலுகாக்களில் உள்ள 25 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். மேலும் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் விவசாய பயிர்கள் அழுகும் நிலை உள்ளது.

இதற்கிடையே, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் சூழ்ந்துள்ள 25 கிராமங்களை சேர்ந்த மக்கள் கால்நடைகளையும், உடைமைகளையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மேலும் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையையொட்டி ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள பச்சிமா வாகினி கோவில், சாய்பாபா கோவில், தொட்டகவுடனகொப்பலு கிராமத்தில் உள்ள கவுதமா சேத்ரா மடம், பாண்டவபுரா சைதமா மருத்துவ மையம் ஆகியவற்றுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில சிறிய நீர்ப்பாசனத் துறை மந்திரி புட்டராஜு நேற்று பார்வையிட்டார். பின்னர் மண்டியாவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறுகையில், ‘கே.ஆர்.எஸ். அணை நிரம்பும் நிலையில் உள்ளது. வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கே.ஆர்.எஸ். அணையில் வருகிற 20-ந்தேதி முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை நடத்துகிறார். ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது கே.ஆர்.எஸ். அணை நிரம்பியது. அப்போதும் அவர் அணையில் சிறப்பு பூஜை நடத்தினார். தற்போது 2-வது தடவையாக 20-ந்தேதி அவர் அணையில் பூஜை நடத்துகிறார்‘ என்றார்.

Next Story