கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறப்பு 1 லட்சம் கனஅடி நீர்வரத்தால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை எட்டியது


கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறப்பு 1 லட்சம் கனஅடி நீர்வரத்தால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை எட்டியது
x
தினத்தந்தி 16 July 2018 11:45 PM GMT (Updated: 16 July 2018 8:05 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை எட்டியது.

சேலம்,


கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் கூடுதலாக திறந்து விடப்படுகிறது. குறிப்பாக நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 123.85 அடியை எட்டியது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 63 ஆயிரத்து 488 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 123.85 அடிக்கு உயர்ந்ததால், அணையின் பலம் கருதி உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரத்து 277 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்றொரு பிரதான அணையான கபினி அணையும் நிரம்பியது. குறிப்பாக 2,284 அடி நீர்மட்டம் கொண்ட (கடல் மட்டத்தில் இருந்து) கபினி அணையின் நீர்மட்டம் 2,283 அடியை எட்டியது. அதற்கு மேல் தண்ணீர் தேக்க முடியாது என்பதால் அந்த அணையில் இருந்தும் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இதன்காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும், மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 277 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவிகள் மற்றும் பிரதான மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் பாறைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் ஒகேனக்கல் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 5 அடி அளவுக்கு தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லாத வகையில் நுழைவுவாயிலை பூட்டி சீல் வைத்து போலீசார் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் மற்றும் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையை ஒட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் படகில் சென்று அளவீடு செய்வது வழக்கம். ஆனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் படகில் சென்று தண்ணீரை அளவிட முடியவில்லை. காவிரி ஆற்றில் உள்ள அளவுகோல் மூலம் தண்ணீரை அதிகாரிகள் கணக்கீட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து செல்கிறது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஏரியூர் அருகே உள்ள நாகமரை, ஏமனூர், செல்லமுடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், ஒட்டனூர்-கோட்டையூர், நாகமரை-பண்ணவாடி பரிசல் துறைகள் உள்ளிட்ட பகுதிகளிலும், குறிப்பாக ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை சுமார் 45 கிலோமீட்டர் தூரம் இடையே உள்ள காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கரையில் நின்றவாறு காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் இயற்கை அழகை கண்டு ரசித்து சென்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேட்டூர் அருகே பண்ணவாடி பரிசல் துறையில் விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல கோட்டையூர், செட்டிப்பட்டி ஆகிய நீர்த்தேக்கப் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த பரிசல்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், ஒகேனக்கல்லில் இருந்து கூடுதல் நீர்வரத்து காரணமாக தமிழகத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் பிரதான நீர் ஆதாரமான மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 60 ஆயிரத்து 120 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இது மாலையில் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

நேற்று காலை நிலவரப்படி 87.92 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இரவு 92 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் உச்ச நீர்மட்டம் 124 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. ஆகும்(ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி). நேற்று காலை நிலவரப்படி அணையில் 50.30 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.


கடந்த 2013-ம் ஆண்டு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நீர்வரத்தின் காரணமாக அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து விரைவில் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 19-ந் தேதி (வியாழக்கிழமை) மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். முதல்-அமைச்சரின் அறிவிப்பை அடுத்து தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர்.

Next Story