பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் புத்தகம் கட்டும் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் புத்தகம் கட்டும் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 July 2018 10:30 PM GMT (Updated: 18 July 2018 7:02 PM GMT)

பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் புத்தகம் கட்டுபவர் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2018-19-ம் ஆண்டு பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு புத்தகம் கட்டுபவர் பிரிவில் தொழிற் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 14 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். மேலும் 40 வயதிற்குஉட்பட்டவராகவும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு இலவச பயிற்சி வழங்கப்படும். மேலும் பயிற்சி காலத்தில் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.


விண்ணப்பிக்க விருப்பம் உள்ள பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் , சாதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப் படம் ஆகியவற்றுடன் தங்களது விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சிவகங்கை என்ற முகவரியில் பெற்றுக்கொண்டு வருகிற 23-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story