கொட்டாம்பட்டி அருகே பெண் கொலை: கள்ளக்காதலன் கைது


கொட்டாம்பட்டி அருகே பெண் கொலை: கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 18 July 2018 11:30 PM GMT (Updated: 18 July 2018 7:37 PM GMT)

கொட்டாம்பட்டி அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

கொட்டாம்பட்டி,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் இருந்து உதினிப்பட்டி செல்லும் சாலையில் தாதாங்களத்தில் சாலை ஓரத்தில் உள்ள முட்புதர் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கிடந்தது. அவரது தலையில் கம்பியால் தாக்கியதற்கான அடையாளம் இருந்தது. கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் துப்புத்துலக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இதில் அந்த பெண் நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஆவுடையாள்புரம் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரது மனைவி பொன்ராணி (வயது34) என்பது தெரியவந்தது. அங்குள்ள தனியார் மணல் நிறுவனம் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் கொட்டாம்பட்டி அருகேயுள்ள பாண்டாங்குடி கிராமத்தை சேர்ந்த பழனிகுமார் என்பவரது மகன் கோகுல் (28) பொன்ராணியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து தற்போது கோகுலை போலீசார் கைது செய்தனர். கொலை செய்தது ஏன் என்பது குறித்து கோகுல் போலீசாரிடம் தெரிவித்ததாவது:-


நான் பொன்ராணியின் கடை அருகேயுள்ள தனியார் மணல் கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்தேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நான் சொந்த ஊரான பாண்டாங்குடிக்கு வந்துவிட்டேன். பின்னர் வெளிநாடு செல்ல பொன்ராணியிடம் பணம் கேட்டு வந்தேன். ஆனால் பொன்ராணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார்.

கடந்த 9-ந் தேதி மதுரைக்கு வந்தார். பணம் கொண்டு வராததால் ஆத்திரம் அடைந்து பொன்ராணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அவரை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கொட்டாம்பட்டியில் இருந்து உதினிப்பட்டி செல்லும் சாலையில் தாதாங்களம் அருகே சாலை ஓரத்தில் உள்ள காட்டிற்கு அழைத்து சென்றேன். அங்கு சென்றதும் இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கியதோடு சேலையை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் செல்போனை எடுத்து கொண்டு வந்து விட்டேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கோகுலிடம் இருந்து நகை மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story