சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை


சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 18 July 2018 11:45 PM GMT (Updated: 18 July 2018 8:50 PM GMT)

சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

பிரபல டி.வி. நடிகை பிரியங்கா(வயது 32). இவர், டெலிவிஷனில் ஒளிபரப்பாகும் ‘வம்சம்’ தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். ‘என் இனிய தோழியே’, ‘சபீதா’ உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து உள்ளார். தற்போது ‘தாமரை’ தொடரில் நடித்து வந்தார். டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார்.

பிரியங்கா, சென்னை வளசரவாக்கம், காமகோடி நகர், சிவன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தரை தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.



பிரியங்காவுக்கும், கூடைப்பந்து பயிற்சியாளரான அருண்பாலா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை இல்லை.

கருத்து வேறுபாடு காரணமாக 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். பிரியங்கா மட்டும் தனியாக இந்த வீட்டில் வசித்து வந்தார். பிரியங்காவுக்கு சமையல் செய்து கொடுப்பதற்காக இளம்பெண் ஒருவர் அவரது வீட்டில் வேலை செய்து வருகிறார்.


நேற்று காலை பிரியங்கா வீட்டுக்கு அந்த பெண் வந்தார். கதவு உள்புறமாக பூட்டி இருந்ததால், நீண்டநேரம் தட்டிப்பார்த்தும் பிரியங்கா கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார்.

அப்போது வீட்டின் உள்ளே படுக்கை அறையில் பிரியங்கா, தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.

இதுபற்றி வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத் தலைமையில் விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் பிணமாக தொங்கிய பிரியங்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மனைவி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் அவருடைய கணவர் அருண்பாலா, விரைந்து வந்து மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-


பிரியங்கா, கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் டி.வி. தொடர்களில் நடித்து வந்தார். ‘வம்சம்’ தொடரில் மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

தனியாக அழகு நிலையம் வைப்பதற்காக கடன் பெற்று, வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து அதற்கான பணிகளை செய்து வந்ததாகவும், இதனால் கடன் பிரச்சினை அதிகரித்து விட்டதாகவும் தெரிகிறது.

மேலும் திருமணம் ஆகி இதுவரை குழந்தை இல்லாத ஏக்கம் என அனைத்தும் ஒன்று சேர்ந்ததால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் பிரியங்கா மனம் உடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருண்பாலா, பிரியங்கா வீட்டுக்கு வந்து அவரை பார்த்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. எனவே பிரியங்கா, கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் பிரச்சினையா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.

கணவன்-மனைவி இருவரது பிரிவுக்கான காரணம் குறித்து பிரியங்காவின் கணவர் அருண்பாலாவிடம் விசாரித்து வருகிறோம். பிரியங்காவின் செல்போனையும் கைப்பற்றி, அவர் கடைசியாக யாருடன் பேசினார்? என்றும் விசாரித்து வருகிறோம்.பிரியங்கா தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர், அவருடன் சேர்ந்து நடித்த டி.வி. நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


பிரியங்காவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

டி.வி. நடிகர்கள் சாய் பிரசாந்த், முரளிமோகன், நடிகைகள் சபர்னா, சோபனா ஆகியோர் ஏற்கனவே மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story