பெரம்பலூரில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்


பெரம்பலூரில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்
x
தினத்தந்தி 19 July 2018 10:45 PM GMT (Updated: 19 July 2018 4:58 PM GMT)

பெரம்பலூரில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் சான்றிதழ் வழங்கினார்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 50–ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதனை முன்னிட்டு பொன்விழா ஆண்டாக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாவட்ட அளவில் தடகள போட்டிகளை 21 வயதிற்குட்பட்ட வீரர்–வீராங்கனைகளுக்கு நடத்தி வருகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நேற்று எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் நடந்தது.

இதற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். விளையாட்டு போட்டிக்கு வந்திருந்தவர்களை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இதையடுத்து பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும் நடந்தது. தடகள போட்டிகளில் 140 வீரர்கள், 110 வீராங்கனைகள் என மொத்தம் 250 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் பெரம்பலூர் சேர்ந்த மாணவர் விபின்ராஜ் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவி வினிஷா முதலிடத்தையும் பிடித்தனர். உயரம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில் பெரம்பலூரை சேர்ந்த மாணவர் அஜித்குமாரும், பெண்கள் பிரிவில் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவி நாகப்பிரியாவும் முதலிடம் பிடித்தனர். நீளம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில் பெரம்பலூரை சேர்ந்த மாணவர் ராகுல்மணிக்ஷாவும், பெண்கள் பிரிவில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சங்கீதாவும் முதலிடம் பிடித்தனர்.


பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் முதல் இடம் பிடித்த வீரர்–வீராங்கனைகளுக்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தங்கப்பதக்கத்தினை அணிவித்து சான்றிதழை வழங்கினார். 2–ம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழும், 3–ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. முடிவில் தடகள பயிற்சியாளர் கோகிலா நன்றி கூறினார். மேலும் போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு பரிசு தொகையாக ரூ.2,500–ம், 2–ம் இடம் பெற்றவருக்கு ரூ.1,500–ம், 3–ம் இடம் பெற்றவருக்கு ரூ.ஆயிரமும், அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவுள்ளது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக போட்டிகளை தொடங்குவதற்கு முன் நெகிலி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமையில் சிறப்பு விருந்தினர், விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் ஏற்றுக்கொண்டனர்.

Next Story