தொடர் விபத்துகளை ஏற்படுத்தி வரும் தனியார் பஸ்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த கோரிக்கை


தொடர் விபத்துகளை ஏற்படுத்தி வரும் தனியார் பஸ்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த கோரிக்கை
x
தினத்தந்தி 19 July 2018 10:30 PM GMT (Updated: 19 July 2018 5:54 PM GMT)

தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி பல உயிர்களை பலி கொடுத்து வரும் தனியார் பஸ்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவியை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சேந்தனி கண்ணதாசன் மாவட்ட நிர்வாகத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் மிகப்பெரிய போக்குவரத்து கழகமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒரு சில தனியார் பஸ்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கியபோது அவை நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் ஒருமுறையாவது கிராமப்புறங்களுக்கு சென்றுவர வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தும், அவைகள் கிராமங்களுக்கு இயக்கப்படாமல் உள்ளன. இதுபோல் தனியார் பஸ்கள் வேகமாக இயக்கப்பட்டு தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. வேக கட்டுப்பாடு கருவி என்பது அரசு பஸ்களுக்கு மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.


ஆனால் தனியார் பஸ்களுக்கு இந்த வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்படாமல் அந்த பஸ்களின் வேகத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்காமல் இருப்பதாலும் தொடர்ந்து சாலைகளில் விபத்து ஏற்பட்டு அதில் பலர் உயிரிழக்கும் சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

எனவே தமிழக அரசு உடனடியாக அரசு பஸ்களுக்குரிய போக்குவரத்து விதிகள் போன்று தனியார் பஸ்களுக்கும் பொருந்தும் வகையில் வேகக் கட்டுபாடு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடுத்தால் மட்டுமே தனியார் பஸ்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க முடியும். மேலும் இந்த வேகக் கட்டுப்பாடு கருவியை பொருத்தி ஆங்காங்கே சோதனைகள் நடத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story