காதல் திருமணம் செய்த டிரைவருக்கு அரிவாள் வெட்டு பெண்ணின் சகோதரர் ஆத்திரம்


காதல் திருமணம் செய்த டிரைவருக்கு அரிவாள் வெட்டு பெண்ணின் சகோதரர் ஆத்திரம்
x
தினத்தந்தி 19 July 2018 11:30 PM GMT (Updated: 19 July 2018 7:12 PM GMT)

மதுரையில் காதல் திருமணம் செய்த கார் டிரைவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

மதுரை,

மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பொன்ராஜ் (வயது 27). தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரும், இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த உறவினர் பெண் செல்வ மீனாவும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இரு வீட்டினரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகள் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே திடீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதனால், நடக்க இருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது. மேலும் பொன்ராஜூவுக்கு அவர் குடும்பத்தினர் வேறு இடத்தில் பெண் பார்த்து வந்துள்ளனர். இதேபோல செல்வமீனாவுக்கும் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.


இந்தநிலையில், காதலர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருச்செந்தூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பொன்ராஜ் வீட்டினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் இருவரையும் ஏற்றுக்கொண்டனர். அதன்பின்னர் பொன்ராஜின் வீட்டிலேயே இருவரும் வசித்து வந்தனர். இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரம் அடைந்த செல்வமீனாவின் சகோதரர் பிரபாகர், பொன்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே நேற்று, பொன்ராஜ் வீட்டுக்கு வந்த பிரபாகர் உள்ளிட்ட 4 பேர், அரிவாளால் பொன்ராஜை வெட்டி உள்ளனர். இதை தடுக்க வந்த பொன்ராஜின் தாயார் மீனாட்சியையும் வெட்டி உள்ளனர். பலத்த காயமடைந்த இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பொன்ராஜ் அளித்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story