பழைய வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் வழக்குகளை விசாரிக்கலாம் தீர்ப்பாயங்களுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


பழைய வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் வழக்குகளை விசாரிக்கலாம் தீர்ப்பாயங்களுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 July 2018 11:15 PM GMT (Updated: 19 July 2018 7:18 PM GMT)

புதிய சட்டம் அமல்படுத்தப்படும் வரை பழைய வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் வழக்குகளை விசாரிக்கலாம் என்று வாடகை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

ராமநாதபுரத்தைச் சேந்தவர் வெங்கடேஷ். இவருக்கு சொந்தமான வீடுகளில் நாகராஜன், வடிவேலு, ஏ.பஷீர்அகமது, அன்னலெட்சுமி ஆகியோர் குடியிருந்து வருகின்றனர். இவர்களை 1960-ம் ஆண்டின் தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை, வாடகை கட்டுப்பாடு) சட்டத்தின்கீழ் காலி செய்ய உத்தரவிடக்கோரி ராமநாதபுரம் வாடகை கட்டுப்பாட்டு தீர்ப்பாயத்தில் வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்தார்.

தமிழகத்தில் புதிய தமிழ்நாடு நில உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் ஒழுங்குமுறை சட்டம் 4.8.2017-ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே 1960-ம் ஆண்டின் வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் வழக்குகளை விசாரிக்க முடியாது என்று வெங்கடேஷ் தாக்கல் செய்த 4 வழக்குகளையும் தள்ளுபடி செய்து மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு தீர்ப்பாயம் கடந்த மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டது.


இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவர், மதுரை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “புதிய வாடகை கட்டுப்பாட்டு சட்டம் அரசிதழில் வெளியிடப்படவில்லை. இதனால் பழைய வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் வழக்குகளை விசாரிக்கலாம்” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

புதிய வாடகை கட்டுப்பாட்டு சட்டம் அமலுக்கு வராத நிலையில் வாடகைதாரர்களை காலி செய்ய உத்தரவிடக்கோரிய வழக்குகளை 1960-ம் ஆண்டின் பழைய வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் விசாரிக்கலாம். அப்படியிருக்கும்போது மனுதாரர் தாக்கல் செய்த 4 வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்காமல் திருப்பி அனுப்பியதை ஏற்க முடியாது. இந்தநிலையில் வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதை தவிர்க்க தமிழகம் முழுவதும் உள்ள வாடகை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை இந்த கோர்ட்டு பிறப்பிக்க நினைக்கிறது.


2017-ம் ஆண்டின் புதிய வாடகை கட்டுப்பாட்டு சட்டம் அமலுக்கு வரும் வரை 1960-ம் ஆண்டின் வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் வீட்டின் உரிமையாளர்கள் வழக்குகளை தாக்கல் செய்யலாம்.

புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை பழைய சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்குகள், மேல்முறையீட்டு மனுக்களை அனைத்து வாடகை கட்டுப்பாட்டு தீர்ப்பாயங்கள், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் ஆகியவை சட்டப்படி விசாரிக்க வேண்டும்.

இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் உள்ள வாடகை கட்டுப்பாட்டு தீர்ப்பாயங்களுக்கு மதுரை ஐகோர்ட்டு பதிவுத்துறை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story