சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட பெண் சமையலர் மீண்டும் பள்ளியில் பணியாற்ற உத்தரவு


சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட பெண் சமையலர் மீண்டும் பள்ளியில் பணியாற்ற உத்தரவு
x
தினத்தந்தி 19 July 2018 11:30 PM GMT (Updated: 19 July 2018 8:47 PM GMT)

இடமாற்றம் செய்யப்பட்ட அரசு பள்ளி பெண் சமையலர் மீண்டும் திருமலைக் கவுண்டன்பாளையம் பள்ளியில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சாதிக்கொடுமையை கண்டித்து பல்வேறு அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூர் அருகே உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த சத்துணவு சமைக்கும் சமையலர் கடந்த மாதம் 30-ந்தேதி பணிநிறைவு பெற்றார். அதை தொடர்ந்து ஒச்சம்பாளையம் பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த பாப்பாள்(வயது 42) என்பவரை திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளிக்கு மாற்றுப்பணியாளராக நியமித்து அவினாசி ஒன்றிய ஆணையாளர் மீனாட்சி உத்தரவிட்டார். பாப்பாள் கடந்த 16-ந்தேதி பணிக்கு வந்தார்.

ஆனால் அவர் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அந்த பள்ளியில் சமையல் செய்யக்கூடாது. அவர் சமையல் செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாப்பாளை சாதி பெயரைச் சொல்லி திட்டியதுடன், சமையல் பாத்திரங்களையும் தூக்கி வீசி சிலர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாப்பாளை மீண்டும் ஒச்சம்பாளையம் பள்ளிக்கே செல்லும்படி உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நேற்று காலை தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தலித் விடுதலை கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து தீண்டாமை ஒழிப்புக்கான கூட்டமைப்பு சார்பில் பாப்பாளுக்கு ஆதரவாக சேவூர் கைக்காட்டி பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி ஆதிதிராவிட மக்கள் பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றுமாறு தலைமை ஆசிரியர் சசிகலாவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருமலைக் கவுண்டன்பாளையம் பள்ளியில் சப்-கலெக்டர் ஷ்வரன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், அவினாசி தாசில்தார் வாணிஜெகதாம்பாள், துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி ஆகியோர் பொதுமக்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது தீண்டாமை ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் சப்-கலெக்டரிடம் அளித்த மனுவில், தீண்டாமை காரணமாக பணியிட மாற்றம் செய்த பாப்பாளின் உத்தரவை ரத்து செய்து திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளியில் பணிநியமனம் செய்ய வேண்டும். பாப்பாளுக்கு அளிக்கப்பட்ட தீண்டாமை வன்கொடுமை புகார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தீண்டாமையின் காரணமாக பாப்பாளுக்கு பணியிடமாற்றம் உத்தரவு வழங்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில், பாப்பாள் மீண்டும் திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளியிலேயே பணியாற்ற அனைவரும் ஒத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஒச்சம்பாளையம் பள்ளிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் பாப்பாளுக்கு போடப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து அவினாசி ஒன்றிய ஆணையாளர் மீனாட்சி கூறியதாவது.

திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலர் பணியிடம் ஒன்று காலியாக இருந்ததால் பாப்பாள் என்பவரை மாற்றுப்பணிக்கு அனுப்பினோம். அவர் அதே ஊரை சேர்ந்தவர் என்பதாலும், உடல்நிலை சரியில்லாததால் ஒச்சம்பாளையத்துக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது என்று கேட்டுக்கொண்டதாலும் அவருக்கு இந்த பள்ளியில் பணி வழங்கப்பட்டது.

அவருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதே பள்ளியில் பணியாற்றி வரும் மல்லிகா என்ற மற்றொரு சமையலரே சமையல் செய்து வந்தார். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பாப்பாளுக்கு போடப்பட்ட மாற்றுப் பணிக்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அவர் திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளியிலேயே பணியாற்றுவதற்கு உத்தரவு போடப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தீண்டாமை ஒழிப்புக்கான கூட்டமைப்பினர் நேற்று இரவு வரை கைக்காட்டியில் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பாப்பாளை சாதிப் பெயர் சொல்லி திட்டியதுடன், சமையல் பாத்திரங்களை தூக்கி எறிந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாப்பாள் அளித்த புகாரின் பேரில் சேவூர் போலீசார் 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதற்கான முதல் தகவல் அறிக்கை நகலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கொடுத்தனர். அதன்பின்பு இரவு 9.30 மணிக்கு மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அரசு பள்ளி பெண் சமையலர் பணியிடமாற்ற விவகாரம்: கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு

அவினாசி அருகே அரசு பள்ளி பெண் சமையலர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அவினாசியை அடுத்த சேவூர் அருகே உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றிய பெண் சமையலர் பாப்பாள் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர். இவர் அந்த பள்ளியில் சமையல் செய்வதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாப்பாளை சாதிப்பெயரை சொல்லி திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பாப்பாளை ஒச்சம்பாளையம் பள்ளிக்கு மாறுதல் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த சாதிக்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் சேவூர் கைக்காட்டியில் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். பாப்பாளுக்கு மீண்டும் திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளியிலேயே சமையலர் பணி வழங்க வேண்டும். பாப்பாளை சாதிப்பெயரை சொல்லி திட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு அதே பள்ளியில் சமையலர் பணி வழங்கி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சேவூர் போலீசாரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க சமூக நீதிக்கட்சியின் மாநில தலைவர் பன்னீர்செல்வம், இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 3 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் வருகிற 30-ந் தேதி டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story