குடியிருப்புகளை காலி செய்பவர்களுக்கு அருகிலேயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்


குடியிருப்புகளை காலி செய்பவர்களுக்கு அருகிலேயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 July 2018 10:30 PM GMT (Updated: 19 July 2018 9:43 PM GMT)

கோவை உக்கடம் மேம்பால பணிக்காக குடியிருப்புகளை காலி செய்பவர்களுக்கு அருகிலேயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினர் கலெக்டரிடம் வலியுறுத்தினார்கள்.

கோவை,

கோவை உக்கடம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. மேம்பாலத்துக்காக உக்கடம் பஸ்நிலையம் எதிரில் பெரிய ரவுண்டானா அமைக் கப்பட உள்ளது. இதற்காக தெற்கு உக்கடம் சி.எம்.சி. காலனியில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் மேம்பால கட்டுமான பணிகளுக்காக வீடுகளை காலி செய்யக் கூடாது என்றும் அப்படி காலி செய்தால் அருகிலேயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் தெற்கு உக்கடம் சி.எம்.சி. காலனி பகுதியில் வசிப்பவர்களை கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் மயூரா ஜெயக்குமார் (காங்,), ஆர்.ஆர்.மோகன்குமார் (ம.தி.மு.க.), ராமமூர்த்தி, பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட். கம்யூ.), சுந்தரம் (இந்திய கம்யூ.) உள்பட அனைத்து கட்சியினர் சந்தித்தனர். இதையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் ஹரிகரனை சந்தித்து பேசினார்கள்.

இது குறித்து நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மற்றும் அனைத்துக் கட்சியினர் கூறியதாவது:-

கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் அமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த மேம்பாலத்துக்காக தெற்கு உக்கடம் சி.எம்.சி. காலனி பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களின் வீடுகளை காலி செய்ய சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கு சுமார் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

அவர்களை வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு இடமாற்றம் செய்ய இருப்பதாக தெரி கிறது. அப்படி அவர்கள் வெள்ளலூர் சென்றால் அதிகாலையில் அவர்களால் துப்புரவு வேலைக்கு வர முடியாது. எனவே இப்போது அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே புதிதாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தினோம். அதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story