தொழிலாளி வீட்டில் ரூ.1½ லட்சம் நகை-பணம் திருட்டு


தொழிலாளி வீட்டில் ரூ.1½ லட்சம் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 19 July 2018 10:32 PM GMT (Updated: 19 July 2018 10:32 PM GMT)

குமராட்சி அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள வீரநத்தம் சின்னதெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 48), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் மாடிப்பகுதி வழியாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் அறையில் இருந்த சாவி மூலம் பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.8 ஆயிரம், நிலப்பத்திரங்கள் ஆகியவற்றை திருடிச்சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் ரவிச்சந்திரன் எழுந்து பார்த்தபோது, வீட்டில் நகை-பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் குமராட்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story