குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் செய்யலாம் கலெக்டர் தகவல்


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் செய்யலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 July 2018 10:50 PM GMT (Updated: 19 July 2018 10:50 PM GMT)

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மின்னணு புகார் பெட்டியில் புகார் செய்யலாம் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தை நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழுமம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்தும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையகத்தின் வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் மின்னணு புகார் பெட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான சம்பவம் நடைபெற்ற இடம், குற்றம் செய்த நபர் போன்ற விவரங்களை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்டவாறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். மேலும், பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றால் புகார்கள் போலீசாரிடம் அளிக்கப்பட வேண்டும்.

புகார் அளிக்க தவறும் நபர்கள் மற்றும் புகாரினை பதிவு செய்ய மறுக்கும் அல்லது தவறும் அலுவலர்கள் ஓராண்டு வரை சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story