வேலூர் சேண்பாக்கத்தில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் சாவு


வேலூர் சேண்பாக்கத்தில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 19 July 2018 11:45 PM GMT (Updated: 19 July 2018 11:52 PM GMT)

வேலூர் சேண்பாக்கத்தில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

வேலூர்,

இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-


ஆற்காடு தாலுகா ஆயிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 50), கட்டிட மேஸ்திரி. இவரும், ஆற்காடு தோப்புகானா பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22), ஆற்காட்டை அடுத்த மாசாபேட்டையைச் சேர்ந்த ரத்தினம்மாள் (45) ஆகியோர் நேற்று முன்தினம் கட்டிட வேலைக்காக வேலூருக்கு ஒரே மோட்டார்சைக்கிளில் வந்தனர். மோட்டார்சைக்கிளை விக்னேஷ் ஓட்ட, பின்னால் தேவராஜ், ரத்தினம்மாள் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

வேலூர் சேண்பாக்கம் அணுகுச்சாலையில் வந்தபோது, அந்த வழியாக வந்த ஒரு லாரி திடீரென அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்தினம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த தேவராஜ், விக்னேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்ற தேவராஜ் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த விபத்து பற்றி வேலூர் வடக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக கன்சால்பேட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் பாபுவை (38) போலீசார் கைது செய்தனர். விபத்தில் பலியான ரத்தினம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story