தீயணைப்பு படையின் வரலாறு


தீயணைப்பு படையின் வரலாறு
x
தினத்தந்தி 20 July 2018 5:20 AM GMT (Updated: 20 July 2018 5:20 AM GMT)

ஆதி மனிதனின் அஞ்சி நடுங்கிய முக்கிய எதிரி நெருப்பு. ஆனால் சீக்கிரமே அந்த எதிரியை நண்பனாக்கி உணவு சமைக்கப் பயன்படுத்திக் கொண்டான் மனிதன்.

 நினைத்த நேரத்தில் நெருப்பை வரவழைக்கும் தந்திரத்தை அறிந்து கொண்டதில் அவனது முக்கிய வளர்ச்சி ஒளிந்திருந்தது. இன்று வரை உலகில் வேறு எந்த உயிரினமும் உணவை சமைத்து சாப்பிடுவதில்லை. மனிதனுக்கு அந்த பக்குவத்தை அளித்தது நெருப்பின் பயன்பாடுதான்.

நெருப்பை என்னதான் நல்லவிதமாக பயன்படுத்தினாலும், அது ஆபத்தானதுதான். நெருப்பால் ஏற்படும் விபத்துகள் ஏராளமான உயிர்களை காவு கொண்டிருக்கின்றன.

நெருப்பினால் உண்டாகும் தீவிபத்துகளை கட்டுப்படுத்த இன்று தீயணைப்புப் படைகள் இருக்கின்றன. இருந்தாலும் தீயணைப்பின் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையானது.

அலக்சாண்டிரியாவை சேர்ந்த (இப்போதைய எகிப்து) செஸிபியஸ் என்பவர் ஒரு வகை பிஸ்டன் பம்பை கி.மு.200-ல் உருவாக்கி இருந்தார். இது தீயணைப்பு சாதனமாக பயன்பட்டது. 1500-ம் ஆண்டில் ஐரோப்பாவில் மற்றொருவகை பிஸ்டன் பம்புகள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் அவர்கள் செஸிபியஸ் உருவாக்கிய பம்பை அறிந்ததில்லை.

1600 வரை தீயணைப்பு படைக்கான தேவையை உலக நாடுகள் உணரவில்லை. இருந்தாலும் தீயணைப்பு குழுக்கள் செயல்படவே செய்தன. சிறிய தீவிபத்துகளை மக்களே குழுவாக சேர்ந்து சமாளித்தனர்.

1666-ல் லண்டன் தீவிபத்து வரலாற்றில் தீவிபத்தின் கோரத்தை உலகிற்கு உணர்த்திற்று. இங்கிலாந்துகாரர்கள், அப்போதுதான், தாங்கள் பயன்படுத்தும் சிறிய பம்புகள் தீயணைக்க போதுமானதல்ல என்பதை உணர்ந்தார்கள். நவீன கருவிகள் இருந்தால்தான் இனி இதுபோன்ற கொடிய தீவிபத்துகளை எதிர்கொள்ள முடியும் என்று அறிந்து கொண்டனர்.

அதுவே அவர்களை பெரிய பிஸ்டன் எந்திரத்தை தயாரிக்க தூண்டுகோலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் அதை சுலபமாக எடுத்துச் செல்லும் வகையில் ஒரு வண்டியில் பொருத்தி தீயணைப்பு வாகனத்தை உருவாக்கினார்கள். அதற்கு முன்பு வரை தோல் குழாய்களே பயன்பட்டன. இதுவும் பயன்பாட்டில் பல்வேறு சிக்கல்கள் கொண்டதாக இருந்தது. பின்னாளில் இரும்பு குழாய்கள், வாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

இந்தக் காலத்தில் தீயணைப்பு படைகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அது காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டன. தங்கள் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்திருந்த கட்டிடங்கள், நிறுவனங்களுக்கு மட்டுமே அவை தீயணைப்பு சேவையை வழங்கின.

அமெரிக்காவில் பீட்டர் ஸ்டுயூவசண்ட் என்ற டச்சு கவர்னர் தீயணைப்பு படையை உருவாக்கினார். மரவீடுகள் மிகுந்த நகரங்களில் தீயணைப்பு உபகரணங்களுக்கு கூடுதல் வரிவிதித்தார். அப்போது ‘பக்கெட் பிரிகேட்’ என்ற ஒரு அமைப்பு செயல்பட்டது. பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரிசையாக நின்று கொண்டு வாளிகள் (பக்கெட்) தண்ணீரை நிரப்பி ஒவ்வொருவர் கைக்கு மாற்றி தீயைணை அணைக்க உதவுவார்கள். இவர்கள் ‘பக்கட் பிரிகேடியர்’ எனப்பட்டனர்.

நெருப்பு அணைக்கும் எந்திரம் 17-ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் இங்கிலாந்தில்தான் தயாரிக்கப்பட்டது. அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பெஞ்சமின் பிராங்கிளின் முழுமையான தீயணைப்பு இலாகாவினை தொடங்கினார். தீயணைப்பு பிரிவில் முன்னேற்றங்களும், மாற்றங்களும் மிக மெதுவாகவே நிகழ்ந்தன.

1841-ல் அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தானியங்கி தீயணைப்பு என்ஜினை உருவாக்கியது. 1861-ல் நீராவி தீயணைப்பு என்ஜின் உருவாக்கப்பட்டது. இவை முதல் உலகப்போரில் தீயணைக்க பேருதவியாக இருந்தன. குதிரைகள் இந்த நீராவி என்ஜினை வீதிகளில் இழுத்துக் கொண்டு ஓடின.

இரண்டாம் உலகப்போரின்போது தீயணைப்பு படையில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டன. தீயை கட்டுப்படுத்தும் நவீன எந்திரங்கள், சாதனங்கள் உருவாகின. கட்டிடங்களின் உயரங்களுக்கு ஏற்ப மேலேஎழும்பும் ஏணிகள், அதிகமான நீரை இறைக்கும் டீசல் என்ஜின்கள் பயன்பாட்டிற்கு வந்தன. தீயணைப்பு படகுகள்கூட இப்போது பயன்பாட்டில் உள்ளன.

எவ்வளவு முன்னே ற்றங்கள் ஏற்பட்டாலும் கிராமப்புற மக்கள் இன்றும் ‘பக்கட் பிரிகேடு’ முறையில் தன்கையே தனக்கு உதவி என தீயணைப்பு யுத்தியை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் ‘தீயணைப்பு வாகனம் வரும்வரை தீ சும்மா இருக்க ப்போவதில்லை’ என்பது யாவரும் அறிந்ததுதானே! 

Next Story