சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த 8 பேர் மீது வழக்கு


சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 July 2018 9:30 PM GMT (Updated: 21 July 2018 6:47 PM GMT)

ராமநாதபுரத்தில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியதாக 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் 17 வயது சிறுமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது செல்போன் கடை வைத்து நடத்தி வரும் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து சிறுமியை கடத்தி சென்றுள்ளார். சிறுமியை ராமநாதபுரம் முருகன் கோவில் அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு கொண்டு சென்ற வாலிபர் அங்கு வைத்து சிறுமியை பலவந்தமாக பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார். மேலும் அவரின் நண்பர்களும் தகவல் தெரிந்து வந்து மொத்தம் 8 பேர் சேர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினார்களாம். இதனை வெளியில் சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்களாம். இதுபற்றி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சிறுமி தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி அடையாளம் தெரிந்த மற்றும் பெயர் தெரியாத 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதே சிறுமியை கடந்த மாதம் சிலர் சேர்ந்து ஆட்டோவில் கடத்தி சென்று பலவந்தமாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. சிறுமி பாலியல் பலவந்த தாக்குதலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story