வீரபாண்டி அருகே காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை


வீரபாண்டி அருகே காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2018 9:34 PM GMT (Updated: 21 July 2018 9:34 PM GMT)

வீரபாண்டி அருகே காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

வீரபாண்டி,

வீரபாண்டியை அடுத்த அல்லாலபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள். இவரது மகன் ராஜகோபால் (வயது 19). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் ரெங்கசமுத்திரம் ஆகும். ராஜகோபால் தனது உறவினரின் மகளான 16 வயது சிறுமியை காதலித்து வந்தார்.

அந்த சிறுமி கடந்த ஆண்டு பிளஸ்-1 படித்த போது, இருவரும் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி தேனிக்கு சென்றனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வைகை அணை போலீசார், ராஜகோபாலையும், அந்த மாணவியையும் மீட்டு வந்தனர்.

பின்னர், மாணவிக்கு திருமண வயது பூர்த்தி ஆகாததால், நீங்கள் இருவரும் திருமணம் செய்தால் சட்டப்படி செல்லாது என்றும், அவளுக்கு திருமண வயது வந்ததும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்பின்பு கடந்த ஒரு ஆண்டாக இருவரும் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக ராஜகோபாலுடன் அவருடைய காதலி பேச மறுத்துள்ளார். இதனால் ராஜகோபால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜகோபால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் ராஜகோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story