கலெக்டர் அலுவலகத்தில் காட்சிப்பொருளாக இருக்கும் எலக்ட்ரானிக் விளம்பர பலகைகள்


கலெக்டர் அலுவலகத்தில் காட்சிப்பொருளாக இருக்கும் எலக்ட்ரானிக் விளம்பர பலகைகள்
x
தினத்தந்தி 22 July 2018 11:15 PM GMT (Updated: 22 July 2018 5:27 PM GMT)

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக இருக்கும் எலக்ட்ரானிக் விளம்பர பலகைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும் இங்கு பல்வேறு அரசு துறையை சேர்ந்த மாவட்ட அலுவலகங்கள் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் கலெக்டர் தலைமையில் அரசு துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் கலெக்டர் அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வலது மற்றும் இடது புறத்தில் அரசு அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசின் செயல்பாடுகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பெரிய அளவில் எலக்ட்ரானிக் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் சுழற்சி முறையில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு நேரங்களிலும் இந்த விளம்பரமானது தெரியும் வகையில் மின்விளக்கு வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இடது புறத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான எல்.இ.டி. விளக்குகளால் ஆன விளம்பர பலகைகள் மூலம் பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த 2 விளம்பர பலகைகளையும் அதிகாரிகள் சரியான முறையில் பயன்படுத்தாததால் அவை பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் காட்சியளிக்கிறது. இடது புறத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகளால் பொருத்தப்பட்ட விளம்பர பலகை பயன்படுத்தப்படாததால் அதனை சுற்றி முள்செடிகள், கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

இதனை அரசு அதிகாரிகள் யாரும் கண்டும் காணாமல் உள்ளனர். தினந்தோறும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் விளம்பர பலகைகளில் அரசின் திட்டங்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

எனவே திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் பழுதடைந்து இருக்கும் அந்த 2 எலக்ட்ரானிக் விளம்பர பலகைகளையும் சீரமைத்து அதில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த அறிவிப்புகளை விளம்பர படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story