போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பிஓட முயன்ற ரவுடி துப்பாக்கி சூட்டில் பலி


போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பிஓட முயன்ற ரவுடி துப்பாக்கி சூட்டில் பலி
x
தினத்தந்தி 23 July 2018 10:42 PM GMT (Updated: 23 July 2018 10:42 PM GMT)

நாலச்சோப்ராவில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பிஓட முயன்ற ரவுடி, போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதில் பலியானார்.

வசாய்,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்த் ரானா. இவர் அங்குள்ள விஷ்ணு தர்சன் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தார். ரவுடியாக வலம் வந்த இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று காலை ஒரு குற்ற வழக்கு தொடர்பாக போலீஸ்காரர்கள் மங்கேஷ் சவான், மனோஜ் ஆகிய 2 பேர் கோவிந்த் ரானாவை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது, வீட்டில் கோவிந்த் ரானாவுடன் அவரது கூட்டாளிகள் 2 பேர் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பிஓட முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.

இதில், கோபம் அடைந்த கோவிந்த் ரானா தான் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் மங்கேஷ் சவானின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கீழே சரிந்தார்.

இதையடுத்து, கோவிந்த் ரானா உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் துடித்த போலீஸ்காரர் மங்கேஷ் சவான் உடனே தனது சர்வீஸ் துப்பாக்கியை எடுத்து கோவிந்த் ரானாவை நோக்கி சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

அவரது கூட்டாளிகள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கோவிந்த் ரானா உயிரிழந்தார்.

போலீஸ்காரர் மங்கேஷ் சவான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார். கோவிந்த் ரானாவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் துப்பாக்கி சூட்டில் ரவுடி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story