குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா
x
தினத்தந்தி 29 July 2018 11:38 PM GMT (Updated: 29 July 2018 11:38 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா இன்று(திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 1-ந் தேதி வரை நடக்கிறது.

உடன்குடி, 


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற திருத்தலமாகும். இங்கு வருடம் தோறும் ஆடிக்கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்த வருட கொடை விழா இன்று 30-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி, காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடக்கிறது. காலை 11 மணி, இரவு 11 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி உலா செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசை மற்றும் மகுட இசையும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

வருகிற 1-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணிக்கு மகுட இசை, 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி செல்லுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையரும் கோவில் தக்காருமான ரோஜாலி சுமதா, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

Next Story