கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு: தி.மு.க. தொண்டர்கள் 9 பேர் அதிர்ச்சியில் சாவு


கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு: தி.மு.க. தொண்டர்கள் 9 பேர் அதிர்ச்சியில் சாவு
x
தினத்தந்தி 30 July 2018 11:15 PM GMT (Updated: 30 July 2018 9:02 PM GMT)

கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த தி.மு.க தொண்டர்கள் 9 பேர் அதிர்ச்சியில் இறந்தனர்.

ஒரத்தநாடு,

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 27-ந் தேதி இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவருடைய உடல்நிலை சீரானது.

கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. தொண்டர்கள், ஆஸ்பத்திரி முன்பு குவிய தொடங்கினர். அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் ஆஸ்பத்திரி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கருணாநிதியின் உடல் நிலை குறித்து டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளை தொண்டர்கள் கவலையுடன் கவனித்து வந்தனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள் தெருவை சேர்ந்த தி.மு.க. தொண்டர் முருகன்(வயது 65) என்பவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபடி கருணாநிதியின் உடல் நிலை குறித்த செய்திகளை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகனுக்கு, மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவர் மரணம் அடைந்தார். இதை அறிந்த தி.மு.க பிரமுகர்கள், முருகனின் வீட்டுக்கு சென்று அவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஈரோடு கனிராவுத்தர் குளம் காந்தி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் கணேஷ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 38). இவரும் கூலிவேலை செய்து வந்தார். ராஜேஸ்வரி தி.மு.க. கட்சியின் உறுப்பினராக இருந்து வந்தார். இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை குறைவு தொடர்பான செய்திகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டபோது அதை பார்த்து மிகவும் வருத்தத்தில் இருந்தார். அக்கம், பக்கத்தினரிடமும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலைக்குறைவு குறித்து வருத்தப்பட்டு பேசினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இது தொலைக்காட்சிகளில் மிகவும் பரபரப்பான செய்தியாக காட்டப்பட்டது. இதை வீட்டில் இருந்து டி.வி.யில் பார்த்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜேஸ்வரி மரணம் அடைந்தார். அவருடைய மரணம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.மாரடைப்பால் மரணம் அடைந்த ராஜேஸ்வரிக்கு நந்தினி, செம்பருத்தி என்ற மகள்களும், குருமூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.

பெருந்துறை அருகே உள்ள கிழக்கு ஆயிக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தன அப்பு (வயது 49). இவர் பட்டக்காரன்பாளையம் ஊராட்சி 7-வது வார்டு தி.மு.க. உறுப்பினராக இருந்து வந்தார். 10 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வந்தார். திருமணம் ஆகாதவர். தனியாக வசித்து வந்த அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். தி.மு.க. மீதும் அதன் கட்சி தலைவர் கருணாநிதி மீதும் அளவற்ற பற்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறித்த செய்தியை நேற்று முன்தினம் இரவு வீட்டில் டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை சற்று நேரத்தில் வெளியிடப்பட உள்ளது என்ற செய்தி வெளியானது. இதை பார்த்த ஜனார்த்தன அப்பு அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின்னர் தூங்க சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவரது உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தார்கள். அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இது அவர்களது உறவினர்களையும் மற்றும் கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை வாணிவிலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கங்கன் (வயது 60). தீவிர தி.மு.க. தொண்டரான இவர், வட்ட பிரதிநிதியாக இருந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது கொண்ட பற்றின் காரணமாக தனது 2 மகன்களுக்கும் உதயசூரியன், உதயன் என்ற பெயர்களை வைத்தார்.

இந்தநிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தகவல்களை டி.வி.யில் பார்த்து கங்கன் மனம் உடைந்தார்.

நேற்று முன்தினம் இரவு இது தொடர்பான செய்திகளை தனது வீட்டில் டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த கங்கன், திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட கங்கனுக்கு சின்ன பாப்பா என்ற மனைவி உள்ளார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி 5-வது வார்டு காமக்காபட்டியை சேர்ந்தவர் மூக்கையா(வயது 65). நெல் வியாபாரியான இவர், தி.மு.க. முன்னாள் வார்டு செயலாளராக இருந்தார். கட்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர். நேற்று முன்தினம் இரவு கருணாநிதியின் உடல்நிலை மோசமானது பற்றிய செய்தியை டி.வி.யில் மூக்கையா பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அதிர்ச்சி அடைந்த மூக்கையா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவருடைய குடும்பத்தினர், வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூக்கையா பரிதாபமாக இறந்தார். உயிரிழந்த மூக்கையாவுக்கு தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 80). நாதஸ்வர கலைஞர். இவர் தி.மு.க. கிளைச்செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கணேசன் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.

நேற்று முன்தினம் தனது வீட்டில், டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை பற்றி ஒளிபரப்பான செய்திகளை தொடர்ந்து பார்த்து கொண்டு இருந்த கணேசன், கருணாநிதிக்கு உடல்நிலை பூரண நலம் பெற வேண்டும் என அழுது புலம்பி உள்ளார். இந்தநிலையில் இரவு 7 மணிக்கு திடீரென கணேசன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் கணேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் 7-வது வார்டை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 60). ஓய்வு பெற்ற ஆசிரியர். மேலும் நல்லுசாமி தி.மு.க. கட்சியின் தொண்டரும் ஆவார். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த நல்லுசாமி மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். மேலும் அவர் கடந்த 3 நாட்களாக மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடந்துள்ளார். கருணாநிதி உடல்நிலை பற்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகளை பார்த்து கொண்டு, கருணாநிதி பூரண நலம் பெற்று வர வேண்டும் என அழுது புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11 மணியளவில் கருணாநிதி உடல்நிலை பற்றி சமூக வலைதளங்களான முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப்களில் பரவிய வதந்திகளை கேள்விப்பட்டதை தொடர்ந்து அவர் வீட்டில், அது பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது நல்லுசாமிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நாற்காலியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டார். நல்லுசாமியின் உடலுக்கு தி.மு.க. கட்சியின் பெரம்பலூர் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பிச்சைத்தலைவன்பட்டியை சேர்ந்தவர் கோயில்பிள்ளை (வயது 75). முன்னாள் தி.மு.க. கிளை செயலாளரான இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜெயமாலினி (70). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் கோயில்பிள்ளை தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான செய்திகளை டி.வி.யில் பார்த்து கோயில்பிள்ளை மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இதனை தனது மனைவி ஜெயமாலினியிடமும் கூறி புலம்பியுள்ளார்.

நேற்று காலை அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு கோயில்பிள்ளை டீ குடிக்கச் சென்றார். அங்கு டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை குறித்த செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் மனம் உடைந்த கோயில்பிள்ளை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 59). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வில் தொண்டராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு மனக்கவலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த அவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். 

Next Story