குடும்ப தகராறில் விபரீதம் இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை


குடும்ப தகராறில் விபரீதம் இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2018 10:00 PM GMT (Updated: 31 July 2018 8:49 PM GMT)

கண்ணமங்கலம் அருகே குடும்பத்தகராறில் கணவர் கண்முன்பே இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கலசபாக்கம்,

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தை சேர்ந்தவர் டெல்லிபாபு (வயது 25). இவர், சென்னை ராயபுரம் பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருக்கும் சென்னை ராயபுரத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகள் சுருதி (19) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிபாபு தனது சொந்த ஊரான சோமாசிபாடி கிராமத்திற்கு மனைவி சுருதி உடன் வந்து உள்ளார். பின்னர் கணவன் - மனைவி இருவரும் அங்கிருந்து கலசபாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தில் உள்ள டெல்லிபாபுவின் உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று உள்ளனர். அப்போது கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் மனமுடைந்த சுருதி நள்ளிரவு 1 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள குளத்தை நோக்கி சென்றார். கணவரும் பின்தொடர்ந்து அவரை சமாதானப்படுத்த சென்றார். எனினும் சுருதி திடீரென குளத்துக்குள் குதித்து விட்டார். அவரை தடுக்க முயன்றும் கணவரால் முடியவில்லை. மேலும் அவருக்கு நீச்சல் தெரியாததால், டெல்லிபாபு குளத்தின் கரையில் இருந்து சத்தம் போட்டு உள்ளார். இரவு நேரம் என்பதால் யாரும் வரவில்லை.

பின்னர் ஊருக்குள் வந்து சம்பவத்தை கூறியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் குளத்தில் குதித்து தேடி பார்த்தனர். எனினும் அவர்களால் சுருதியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கும், கடலாடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் இறங்கி சுருதியை பிணமாக மீட்டனர். இதையடுத்து போலீசார் சுருதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட சுருதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

கணவன் கண்முன்பே மனைவி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story