உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தால் போலீசில் ஒப்படைக்கவேண்டும்

எறையூர் பகுதியை சேர்ந்தவர்கள் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தால் போலீசில் ஒப்படைத்து விடவேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விழுப்புரம் அருகே அரும்பட்டு கிராமத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமான 17 வயது சிறுமியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அந்த சிறுமிக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்திலேயே கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த சிலர் தான் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தனர். ஆனால் தற்போது எறையூர் பகுதியை சேர்ந்த பலர் தங்களது வீடுகளில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அவ்வாறு உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனே அதனை எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story