காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு இருந்தால் காங்கிரஸ் பிரமுகர் கொலையை தடுத்திருக்கலாம் போலீசாருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கண்டிப்பு


காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு இருந்தால் காங்கிரஸ் பிரமுகர் கொலையை தடுத்திருக்கலாம் போலீசாருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கண்டிப்பு
x
தினத்தந்தி 2 Aug 2018 9:51 PM GMT (Updated: 2 Aug 2018 9:51 PM GMT)

காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு இருந்தால் காங்கிரஸ் பிரமுகர் கொலையை தடுத்திருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கண்டிப்புடன் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை பெரிய காலாப்பட்டை சேர்ந்த, காங்கிரஸ் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் ஜோசப் (வயது 42) கடந்த 30-ந் தேதி கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா முன்னிலை வகித்தார். இதில் போலீஸ் ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அபூர்வ குப்தா, ராகுல் அல்வால், மகேஷ்குமார் பன்வால் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போலீசாருக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

புதுவையில் சமீப காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்டு உள்ளன. அதை பாராட்டுகிறேன். தற்போது புதுவையில் கஞ்சா விற்பனை சகஜமாகி வருகிறது. போலீஸ் அதிகாரிகள் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். ரவுடிகளுடன் தொடர்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கு இடம் கொடுக்க கூடாது. நிலப்பிரச்சினை விவகாரத்தில் போலீசார் தலையீடு இருக்கக்கூடாது.

காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் (காங்கிரஸ் பிரமுகர் ஜோசப்) தமிழகப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். காலாப்பட்டு போலீசார் விழிப்பாக இருந்திருந்தால் அந்த உயிரிழப்பை தடுத்து இருக்கலாம். காவல்துறையானது விழிப்புடன் செயல்பட வேண்டும்.

புதுவை நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க உடனடியாக தீர்வு காண வேண்டும். முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன்களில் பேசக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தின்போது பேசிய போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, ‘புதுச்சேரியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விசாரிக்க தனிப்பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.

Next Story