குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன்- ஜாண்தங்கத்துக்கு உற்சாக வரவேற்பு


குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன்- ஜாண்தங்கத்துக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 11:00 PM GMT (Updated: 4 Aug 2018 7:41 PM GMT)

குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜாண்தங்கம் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

ஒருங்கிணைந்த குமரி மாவட்டம், அ.தி.மு.க.வின் நிர்வாக வசதிக்காக குமரி கிழக்கு, குமரி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதன்படி குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகனும், குமரி மேற்கு மாவட்ட செயலாளராக ஜாண்தங்கமும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப்பட்டபிறகு முதல்-முறையாக அவர்கள் 2 பேரும் நேற்று காலை குமரி மாவட்டம் வந்தனர்.

ரெயில் மூலம் வருகை தந்த அவர்களுக்கு நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 பேருக்கும் அ.தி.மு.க.வினர் ஆளுயர மாலை, மலர்க்கிரீடம், மாலைகள் மற்றும் சால்வைகள் அணிவித்தனர்.

பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வடசேரிக்கு சென்றனர். வழியில் அவர்களுக்கு கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பு, பெரியநாடார் தெரு சந்திப்பு, கோர்ட்டு வாயில் ஆகிய பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் வடசேரியில் அண்ணா சிலை, எம்.ஜி.ஆர். சிலை ஆகிய தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர். சிலையின் அருகில் உள்ள ஜெயலலிதாவின் மணல் சிற்பத்துக்கும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் எஸ்.ஏ.அசோகன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வந்த ஒருவித மன இறுக்கத்தை நிவர்த்தி செய்யும் வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். குமரி மாவட்டம் எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்திருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்பயனாக எனக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு தந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முயற்சி எடுத்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், தமிழ்மகன் உசேன் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எள்ளளவும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் நாங்கள் பணியாற்றுவோம்.

வீடு, வீடாகச் சென்று தொண்டர்களை சந்தித்து நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றிபெறவும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறவும் உழைப்போம். சில தொண்டர்கள் இடம்மாறி சென்றிருக்கலாம். அவர்களை உரிமையோடு கையைப்பிடித்து அழைத்து வந்து இந்த இயக்கத்தில் சேர்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பேசிய ஜாண்தங்கம், “அ.தி.மு.க. தொண்டர்கள் ஒற்றுமையோடு செயல்பட்டு குமரி மாவட்டம் என்றைக்கும் ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்“ என்றார்.

பின்னர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஆர்.பி.ஆர். குரூப்ஸ் இரா.பாலகிருஷ்ணன், ஆரல்வாய்மொழி கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், முன்சிறை ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் கிருஷ்ணதாஸ், மாவட்ட இலக்கிய அணி முன்னாள் செயலாளர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஆர்.தென்கரை மகாராஜன், நாகர்கோவில் நகர அவைத்தலைவர் வி.கே.மகாதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் பொன்.சுந்தர்நாத், மாவட்ட வக்கீல் அணி பொருளாளர் சுந்தரம், முன்னாள் நகர அவைத்தலைவர் எஸ்.ஏ.விக்ரமன், எஸ்.ஏ.கதிரவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எஸ்.வெற்றிவேல், ராஜாக்கமங்கலம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் எஸ்.வீராசாமி, வெள்ளாளன்விளை கிளைத்தலைவர் சுதர்சன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய முன்னாள் அவைத்தலைவர் காரவிளை மணி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற முன்னாள் இணைச்செயலாளர் ஜெயசிங், அரசு முதல்நிலை ஒப்பந்தக்காரர் கிருஷ்ணப்பா, ஸ்ரீதரன், பிரபாகரன், குருதவசி, பீட்டர், ராஜகோபால், திருமால், ராஜகிருஷ்ணன், வைகுண்டராஜ், வேணுகோபால், பாரத் மினிபஸ் சர்வீஸ் பால்சுவாமி, ஏதேன் பஜாஜ் மேலாளர் விவேக், பிர்த்திக், பெருமாள் மெடிக்கல்ஸ் உரிமையாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், ராஜா சர்பத் உரிமையாளர் எஸ்.அன்புக்கரசு, எஸ்.ராஜா ஆனந்த், காட்டாத்துறை பேரூராட்சி முன்னாள் தலைவர் பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story