உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 5 Aug 2018 10:59 AM GMT (Updated: 5 Aug 2018 10:59 AM GMT)

அவள் கிராமப் பகுதியில் உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்தவள். ஏழ்மை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

திருமணம் தள்ளிக்கொண்டே போனது. கடைசியில் ஒருவழியாக அவளை அந்த பகுதியில் ‘வாழ்ந்துகெட்ட குடும்ப த்தை சேர்ந்தவர்’ என்று கூறப்படுகிற ஒருவருக்கு திருமணம் செய்துவைத்தார்கள்.

மணவாழ்க்கை அவளுக்கு நரகமாக அமைந்தது. சுவையாக சாப்பிடுவது- தினமும் குடிப்பது- நன்றாக உடை அணிந்துகொண்டு ஊர்சுற்றுவது ஆகிய மூன்றும்தான் அவளது கணவனின் வழக்கமான வாழ்க்கை முறையாக இருந்தது. வேலைக்குப் போகும் வழக்கமே இருந்திருக்கவில்லை. பணத்தேவைக்கு அக்கம்பக்கத்தில் கடன் வாங்குவது வாடிக்கையானது. கஷ்ட ஜீவனத்திற்கு மத்தியில் அவள் இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள்.

குழந்தைகள் வளர்ந்து கொண்டிருந்தார்கள். உறவினர்கள் யாரும் உதவும் நிலையில் இல்லை. கடன் ெதாந்தரவும் அதிகரித்தது. அதனால் இரவோடு இரவாக கணவரையும் அழைத்துக்கொண்டு தொழில் நகரம் ஒன்றை தேடி சென்றாள். அங்கு சிறிய வாடகை வீடு ஒன்றில் தங்கினார்கள். ‘பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றால் நீங்கள் குடிப்பழக்கத்தை கைவிடவேண்டும். நாம் இருவரும் வேலைக்கும் செல்லவேண்டும்’ என்றாள். அவரும் சரி என்று தலையாட்டினார்.

அவளே நேரடியாக களத்தி்ல் இறங்கி, ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் கணவருக்கும், தனக்கும் வேலை தேடிக்கொண்டாள். இரண்டு வாரங்கள் வேலைக்கு சென்ற அவர் பின்பு, ‘தன்னால் இதுபோன்ற வேலைகளை செய்ய முடியாது’ என்று கூறி வேலைக்கு செல்வதை தவிர்த்தார். மனைவி வேலைபார்த்து சம்பாதிக்கும் பணத்தையும் குடித்து தீர்த்தார். அவள் தட்டிக் கேட்கும்போது கண்மூடித் தனமாக தாக்கினார். அத னால் அவளால் வேலைக்கு செல்ல முடியவில்லை. குழந்தைகளுக்கும் அடி விழுந்தது. வீட்டில் பட்டினி ஏற்பட்டது.

அவளைவிட 25 வயது அதிகமான ஒருவர் அவள் வேலைபார்த்த நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருந்து வருகிறார். மனைவியை இழந்த அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். அவர், அவளது சோக நிலையை அறிந்து அவ்வப்போது பண உதவி செய்து வந்தார். அந்த குழந்தை களின் படிப்புக்கும் உதவி செய்து ஆதரவுக்கரம் நீட்டினார்.

அவர் செய்துகொண்டிருக்கும் உதவி, அவளது கணவனுக்கு சந்தேகத்தை ஏற் படுத்தியது. ‘மனைவிக்கும்- அவருக்கும் தொடர்பு இருப்பதாக’ கூறி தினமும் தாக்கினார். அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதற்கு மேலும் இதை அனுமதித்தால் தனது உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்றும், தனது குழந்தைகள் அனாதையாகிவிடு வார்கள் என்றும் பயந்து, வீட்டை விட்டு வெளிேயறி திடீரென்று குழந் தைகளோடு காணாமல் போனாள்.

இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் மனைவி திரும்பிவராததால், கணவர் போலீஸ் நிலையம் சென்றார். ‘என் மனைவி, குழந்தைகள் இருவரோடு அவளது திருட்டு காதலனோடு போய்விட்டாள்’ என்று புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். அவளுக்கு உதவி செய்து வரும் அந்த நபரின் வீட்டில் அவளையும், இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடித்தனர். அவள், ‘எனக்கும்- அடைக்கலம் தந்திருக்கும் இவருக்கும் எந்த ரகசிய உறவும் கிடையாது. உயிருக்கு பயந்து நான் இங்கு வந்து தங்கியிருக்கிறேன். என் கணவர் என்னை இனி அடிக்கமாட்டேன் என்று உங்கள் (போலீசார்) முன்னிலையில் எழுதித்தந்தால் நான் குழந்தைகளோடு கணவருடன் சென்றுவிடுகிறேன்’ என்றாள்.

குடிகார கணவனும் அப்படியே எழுதிக்கொடுத்துவிட்டு அழைத்துச்செல்லத் தயாராக, குழந்தைகள் இருவரும் திடீரென்று, ‘நாங்கள் எங்கள் அப்பாவை நம்பி செல்லமாட்டோம். அவர் அம்மாைவ மட்டுமல்ல எங்களையும் முரட்டுத்தனமாக அடிக்கிறார். கொஞ்சம்கூட அவருக்கு எங்கள் மீது பாசம் இல்லை. நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம். இங்கேதான் இருப்போம்..’ என்று தாயின் கால்களை பிடித்துக்கொண்டு கதறினார்கள்.

போலீசாரின் கண்கள் கலங்க, பெத்த அப்பனின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி தலைகுனிந்த அந்த குடிகார தந்தை, புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பிபோய்விட்டார்!

- உஷாரு வரும். 

Next Story