குண்டடம் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயுடன் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


குண்டடம் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயுடன் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Aug 2018 11:45 PM GMT (Updated: 5 Aug 2018 7:24 PM GMT)

குண்டடம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விவசாயி தனது தாயாருடன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள வண்ணாபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி, இவரது மகன் முத்துச்சாமி(வயது 38) விவசாயி. இவரது மனைவி செல்வி(28). இவர்களுக்கு ராஜலட்சுமி(11) என்ற மகளும், மாணிக்கசத்தியமூர்த்தி(4) என்ற மகனும் இருந்தனர். இவர்களுடன் முத்துசாமியின் தாயார்மயிலாத்தாள்(70) வசித்து வந்தார்.

முத்துச்சாமி கெத்தல்ரேவை அடுத்துள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்தார். முத்துச்சாமியின் மனைவி செல்வி தோட்டத்தில் வேலை இல்லாத போது பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வது வழக்கம். மகள் ராஜலட்சுமி தேர்ப்பாதை கெத்தல்ரேவ் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். மகன் மாணிக்கசத்தியமூர்த்தி இன்னும் பள்ளியில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் வறட்சி காரணமான முத்துச்சாமி குத்தகைக்கு எடுத்த தோட்டத்தில் விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வளர்த்து வந்த ஆடு, மாடுகள், கோழிகள் ஆகியவற்றை முத்துச்சாமி விற்றுவிட்டார்.

மேலும் விவசாயம் சரியாக நடைபெறாததால் குத்தகைக்கு எடுத்த தோட்டத்துக்கு உரிய பணத்தை கொடுக்க முடியாமலும், குடும்பத்தை பராமரிக்க முடியாமலும் அவர் பெரிதும் சிரமப்பட்டார். இதன் காரணமாக ஆங்காங்கே பலரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்தக்கடன்களையும் முறையாக திருப்பிக்கொடுக்க முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே போல் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வி கணவரிடம் கோபித்துக்கொண்டு ரங்கம்பாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வழக்கமாக இவர்கள் தோட்டத்துக்கு வரும் அந்த பகுதியை சேர்ந்த ராமாத்தாள் என்ற பெண் வந்துள்ளார்.

அப்போது முத்துச்சாமியின் கூரை வீட்டு கதவு வெளிப்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. அத்துடன் வீட்டுக்கு அருகில் இருந்த வேப்பமரத்தில் முத்துச்சாமியும், அவரது தாயார் மயிலாத்தாளும் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமாத்தாள் பதறியடித்து சிறிது தூரத்தில் உள்ள மற்றொரு வீட்டில் படுத்திருந்த முத்துச்சாமியின் தந்தை வேலுச்சாமிக்கு தகவல் கொடுத்தார். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ளோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினார்கள். பின்னர் சிலர் முத்துச்சாமியின் வீட்டை திறந்துபார்த்தனர். அப்போது வீட்டினுள் குழந்தைகள் ராஜலட்சுமி, மாணிக்கசத்தியமூர்த்தி ஆகியோரும் விட்டத்தில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர்.

இது குறித்து உடனடியாக குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கிய 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் முத்துச்சாமி கடன் தொல்லையால் மிகவும் மன முடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை வலுக்கட்டாயமாக தூக்கில் போட்டு கொன்றுவிட்டு தனது தாயாருடன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதற்கிடையில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்வி, தனது குழந்தைகள் மற்றும் கணவர், மாமியார் ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

குழந்தைகளை கொன்றுவிட்டு விவசாயி தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குண்டடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story