அரியாங்குப்பத்தில் 3 நம்பர் லாட்டரி விற்ற 2 பேர் கைது


அரியாங்குப்பத்தில் 3 நம்பர் லாட்டரி விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2018 10:30 PM GMT (Updated: 5 Aug 2018 8:22 PM GMT)

அரியாங்குப்பத்தில் 3 நம்பர் லாட்டரி விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்ற பணம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் 3 நம்பர் போலி லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ் ஆகியோர் அரியாங்குப்பம் போலீசாரின் உதவியுடன் அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருவர் செல்போனில் பேசியபடி ஒரு தாளில் நம்பர்களை குறித்துக் கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் அவர் 3 நம்பர் போலி லாட்டரியை செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்றது தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் அரியாங்குப்பம் ஆனந்தா நகரை சேர்ந்த சூரியமூர்த்தி என்பதும், போலி லாட்டரியை அரியாங்குப்பத்தை சோலை கவுண்டர் வீதியை சேர்ந்த ஆதிலிங்கம் (55) என்பவர் மூலம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

விசாரணையைத் தொடர்ந்து சூரியமூர்த்தி (45) மற்றும் ஆதிலிங்கம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story