ஆடி மாதத்தை முன்னிட்டு அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்


ஆடி மாதத்தை முன்னிட்டு அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 5 Aug 2018 10:30 PM GMT (Updated: 5 Aug 2018 8:41 PM GMT)

ஆடி மாதத்தை முன்னிட்டு அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

அரியலூர்,

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆடி மாதத்தை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனியில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் நேற்று காலை கோவிலில் இருந்து நேர்த்திக்கடனாக பால்குடத்தை தலையில் சுமந்து மேள, தாள வாத்தியத்துடன் புறப்பட்டனர். அப்போது ராஜ ராஜேஸ்வரி அம்மன் வீதி உலா வந்தார். துறைமங்கலம், கே.கே.நகர் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

இதையடுத்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். வருகிற 12-ந்தேதி கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி கிருத்திகை விழாவினை முன்னிட்டு அரியலூர் மின்நகர் முருகன் கோவில், ராஜீவ்நகர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடத்தை தலையில் சுமந்தும், அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக ஜெயங்கொண்டம் சாலை, கலெக்டர் அலுவலகம் வழியாக மின்நகர் முருகன் கோவிலுக்கும், தேவி கருமாரியம்மன் கோவிலுக்கும் சென்றடைந்தனர். இதையடுத்து முருகன், தேவி கருமாரியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு அரியலூர் பாலதண்டாயுதபாணி கோவில், அரசு சிமெண்டு ஆலை குறைதீர்க்கும் குமரன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதே போல் அரியலூர் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

Next Story