டி.வி. நடிகையின் கார் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் ஆத்திரம்


டி.வி. நடிகையின் கார் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் ஆத்திரம்
x
தினத்தந்தி 5 Aug 2018 11:30 PM GMT (Updated: 5 Aug 2018 9:11 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆத்திரத்தில் டி.வி. நடிகையின் கார் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆத்திரத்தில் டி.வி. நடிகையின் கார் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கார் கண்ணாடி உடைப்பு

மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருபவர் பிரபல டி.வி. நடிகை ருபாலி கங்குலி(வயது41). இவர் சம்பவத்தன்று காலை தனது 5 வயது மகனை காரில் பள்ளிக்கு அழைத்துச்சென்றார். அந்தேரி மேற்கு, பாரத்நகர் சிக்னல் ஜங்ஷன் அருகே சென்றபோது, கார் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதி உள்ளது.

இதையடுத்து நடிகை மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் நடிகையை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

மேலும் நடிகையின் காரின் முன் கதவு கண்ணாடியை உடைத்தனர். இதில், உடைந்த கண்ணாடி பட்டு நடிகைக்கு காயம் ஏற்பட்டது.

2 வாலிபர்கள் கைது

இந்த சம்பவம் குறித்து நடிகை அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நடிகையை தாக்கியது வெர்சோகாவ் பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது30), ஆகாஷ் (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story