தூத்துக்குடியில் கார் மீது மண்எண்ணெய் குண்டு வீச்சு


தூத்துக்குடியில் கார் மீது மண்எண்ணெய் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 5 Aug 2018 10:44 PM GMT (Updated: 5 Aug 2018 10:44 PM GMT)

தூத்துக்குடியில் கார் மீது மண்எண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, 


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்தவர் ஜேசுதாசன் (வயது 40). இவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் காரை நிறுத்துவது வழக்கம்.

நேற்று முன்தினம் அதிகாலையில் இவரது வீட்டின் அருகில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் மண்எண்ணெய் நிரப்பிய ஒரு பீர் பாட்டிலில் தீ வைத்து, திடீரென்று ஜேசுதாசனின் கார் மீது தூக்கி வீசியதாக தெரிகிறது.

அந்த மண்எண்ணெய் குண்டு, அருகில் இருந்த மளிகை கடையின் பெயர் பலகையில் பட்டு, கார் மீது விழுந்தது.

இதில் கார் கண்ணாடி உடைந்தும், பெயர் பலகை எரிந்தும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக கார் மற்றும் மளிகை கடையில் தீப்பிடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து ஜேசுதாசன் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து, கார் மீது மண்எண்ணெய் குண்டு வீசிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். 

Next Story