மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் மனு


மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 6 Aug 2018 10:45 PM GMT (Updated: 6 Aug 2018 4:18 PM GMT)

மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நாம் தமிழர் கட்சியின் குமரி மண்டல பொருளாளர் ஜாண்சிலின் சேவியர்ராஜ் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கொடுத்த மனுவில், திருவட்டார் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்த மதுக்கடை கோர்ட்டு உத்தரவால் மூடப்பட்டது. தற்போது அதே பகுதியில் தனியார் மூலம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கடை திறக்க முயற்சி நடக்கிறது. எனவே இதனை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பின் குமரி மாவட்ட தலைவர் இன்பசாகரன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

‘குமரி மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட கார் வியாபாரிகளும், ஆலோசகர்களும் உள்ளனர். மேலும் எங்கள் தொழிலை சார்ந்த வாகன மெக்கானிக்குகள், உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள், டிராவல்ஸ் நடத்துவோர் உள்ளிட்டவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தினருக்கும் எந்த விதமான சலுகைகளும் அரசிடம் இருந்து கிடைக்காததால் சுய தொழில் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் எங்களது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் விதமாக மோட்டார் வாகன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியா முழுவதும் கோடி கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த மசோதாவை தடுத்து நிறுத்த வேண்டும்‘ என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story