தென்தாமரைகுளம் அருகே பரிதாபம் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


தென்தாமரைகுளம் அருகே பரிதாபம் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 6 Aug 2018 11:00 PM GMT (Updated: 6 Aug 2018 4:29 PM GMT)

தென்தாமரைகுளம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது.

தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளம் அருகே மயிலாடிபுதூரை சேர்ந்தவர் வசந்தன் (வயது 30), கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவருக்கும் புவியூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் ஜெயஸ்ரீதேவிக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜெயஸ்ரீதேவிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அறுவைசிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

பிரசவத்துக்கு பிறகு அவர் நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ஜெயஸ்ரீதேவி, புவியூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கோவில் கொடை விழாவுக்காக சென்றார். விழா முடிந்த பின்பு, வீட்டின் மாடிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாடியில் சென்று பார்த்த போது, அங்குள்ள உத்திரத்தில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயஸ்ரீதேவியை பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தென்தாமரைகுளம் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், குழந்தைக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்க முடியாத சோகத்தில் ஜெயஸ்ரீதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணமாகி 1½ ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இதுகுறித்து நாகர்கோவில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதிக் தயாள் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story