திருப்பரங்குன்றம் தொகுதி 2–வது இடைத்தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் புதிய வாக்காளர்கள்


திருப்பரங்குன்றம் தொகுதி 2–வது இடைத்தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் புதிய வாக்காளர்கள்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:30 PM GMT (Updated: 6 Aug 2018 8:23 PM GMT)

திருப்பரங்குன்றம் 2–வது இடைத்தேர்தலில் வெற்றியை புதிய வாக்காளர்கள் நிர்ணயிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திருப்பரங்குன்றம்,

தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டு கடந்த 2016–ம் ஆண்டு மே மாதம் 16–ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 77 ஆயிரத்து 299 பேர் இருந்தனர்.

இந்த தொகுதியில் முதல் முறையாக இடைத்தேர்தல் 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் 19–ந் தேதி நடைபெற்றது. இதற்காக புதிய வாக்காளர் சேர்க்கை நடைபெற்றது. அதில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து இடைத்தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 307 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதுமாக சமீபத்தில் நடைபெற்ற புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்து புதிய வாக்காளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் 2–வது பெரிய தொகுதியாக திருப்பரங்குன்றம் அமைந்து உள்ளது.

அதாவது திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 91 ஆயிரத்து 478. இடைத்தேர்தல் நடைபெற்ற 1½ ஆண்டில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களாக 12 ஆயிரத்து 171 பேர் சேர்ந்துள்ளனர். இந்த புதிய வாக்காளர்கள் தான் இடைத்தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.


Next Story