உசிலம்பட்டி அருகே குடிநீர்கேட்டு யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை


உசிலம்பட்டி அருகே குடிநீர்கேட்டு யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Aug 2018 10:15 PM GMT (Updated: 6 Aug 2018 8:23 PM GMT)

உசிலம்பட்டி அருகே குடிநீர்கேட்டு யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அல்லிகுண்டம். இந்த கிராமத்தில் உள்ள கண்மாயில் குடிமராமத்துபணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது அல்லிகுண்டம் கிழக்கே உள்ள தெருவிற்கு குடிநீர்குழாய் கண்மாய்கரையின் வழியாக செல்கிறது. இந்த பணியில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் கண்மாய் கரையைப் பலப்படுத்தும்போது குடிநீர் குழாய் உடைந்துபோனது.

குடிநீர்குழாய் உடைந்ததால் இந்த தெருவிற்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இது குறித்து கடந்த ஒருவாரத்திற்கு முன்பு அப்பகுதியினர் யூனியன் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இந்த புகார் குறித்து இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

இதனால் நேற்று அல்லிகுண்டம் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் ஆதித்தமிழர்கட்சி தலைமைநிலைய செயலாளர் விஸ்வகுமார் தலைமையில், மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலையில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது யூனியன் ஆணையாளர்கள் இளங்கோவன், பாலகிருஷ்ணன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது ஆணையாளர் பாலகிருஷ்ணன், 2 நாட்களில் குடிநீர்குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு அல்லிகுண்டத்திற்கு முறையாக எப்பொழுதும்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story