கொடுமுடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை


கொடுமுடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Aug 2018 10:30 PM GMT (Updated: 6 Aug 2018 9:07 PM GMT)

கொடுமுடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

ஊஞ்சலூர்,

ஊஞ்சலூர் அருகே கருமாண்டாம்பாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இங்கு இடவசதியின்மை காரணமாக அந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய முடிவு செய்தார்கள். இதற்காக சோளங்காபாளையம் பெட்ரோல் பங்க் எதிரில் பாசூர் செல்லும் பிரிவு சாலையில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த கடையை திறக்க அதிகாரிகள் நேற்று மதியம் 12 மணிக்கு அங்கு வந்தார்கள். இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வராஜ் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் கூறும்போது, ‘இங்கு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படாது’ என்று கூறினார்கள்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story