ஊத்துக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து 2 பேர் கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


ஊத்துக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து 2 பேர் கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Aug 2018 10:30 PM GMT (Updated: 7 Aug 2018 6:24 PM GMT)

காட்டுப்பகுதியில் 2 பேர் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை பகுதியில் புகழ் பெற்ற காட்டு செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பின்புறத்தில் அடர்ந்த காடு உள்ளது. நேற்று காலை இந்த காட்டு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அந்த பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் பாலு , சப்- இன்ஸ்பெக்டர்கள் நித்தியானந்தம், கோவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்தனர்.

போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெள்ளை நிற கோடு போட்ட சட்டை, ஊதா நிற ஜீன்ஸ் பேண்டு அணிந்திருந்தார்.

மற்றொருவர் வெள்ளை நிற சட்டை, கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார். இவர்கள் யார்?, எதற்கு கொலை செய்யப்பட்டனர்?, யார் கொலை செய்தார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story