கருணாநிதி மரணம்: 3 பஸ்களின் கண்ணாடி உடைப்பு


கருணாநிதி மரணம்: 3 பஸ்களின் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 7 Aug 2018 11:11 PM GMT (Updated: 7 Aug 2018 11:11 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், 3 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

சேலம், 



தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். இதனால் தி.மு.க. தொண்டர்கள் கவலை அடைந்தனர். இதனால் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டன.

இந்த நிலையில் சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஆத்தூர் நரசிங்கபுரத்தில் அந்த பஸ் மீது மர்ம நபர்கள் கற்களை வீசினார்கள். இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதே போல ஆத்தூர் அருகே உள்ள எடப்பட்டியில் இருந்து ஆத்தூர் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ்சின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி உடைத்து விட்டு, தப்பி ஓடி விட்டனர். இதன் காரணமாக பஸ்களில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்கார்த்திக் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஆத்தூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல திருச்சியில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இரவு சுமார் 10 மணி அளவில் சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி, பட்டர்பிளை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனே மர்ம நபர்கள் ஓடி விட்டனர். 

Next Story