காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? டி.டி.வி. தினகரன் பேட்டி


காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 7 Aug 2018 11:16 PM GMT (Updated: 7 Aug 2018 11:16 PM GMT)

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? என்பது குறித்து திருச்சியில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

செம்பட்டு,

திருச்சியில் இருந்து நேற்று விமானம் மூலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சென்னை புறப்பட்டு சென்றார். விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்த போது கூறியதாவது:-

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை தேவையற்றது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை சென்னை-பெங்களூரு, சென்னை-உளுந்தூர்பேட்டை, சேலம்-வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட சாலைகளை விரிவுபடுத்தலாம்.

8 வழி சாலை திட்டத்தின் மூலம் இயற்கை வளங்களை சுரண்டி தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதோ? என்ற சந்தேகம் எழுகிறது. இந்த திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

காங்கிரசுடன் கூட்டணி பற்றி நான் எதுவும் நேரிடையாக கூறவில்லை. தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி வந்தால் பார்க்கலாம் எனக்கூறியிருந்தேன். கூட்டணியை விலக்கி கொண்டால் அது பற்றி முடிவு எடுக்கப்படும். அ.தி.மு.க.வை பிடித்திருந்த ஏழரை சனி முடிவடைந்தது. அது மீண்டும் வர 30 ஆண்டுகள் ஆகும். வாட்ஸ்-அப், டுவிட்டரிலும் கட்சி நடத்துபவர்களுக்கு பதில் எதுவும் சொல்லவிரும்பவில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதுவரை இந்த ஆட்சி நீடிக்குமா? என்பதை பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story