டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 8 Aug 2018 8:05 AM GMT (Updated: 8 Aug 2018 8:05 AM GMT)

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி

திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி 1995-ம் ஆண்டு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி இளநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளையும், முதுநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளையும் கொண்டுள்ளது. என்.பி.ஏ., டி.சி.எஸ். அங்கீகாரம் மற்றும் ISO 9001:2008 தரச்சான்றிதழையும் பெற்றுள்ளது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறை (டி.எஸ்.ஐ.ஆர்.) இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்துறைக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

பொறியியல் படிப்பில், கட்டிடவியல் துறை, இயந்திரவியல் துறை, கணினி துறை, மின் மற்றும் மின்னணு துறை, தகவல் தொழில்நுட்ப துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை, முதுநிலை பட்ட மேற்படிப்பில் கணினி துறை, தகவல் தொழில்நுட்ப துறை, ஆற்றல்சார் மின்னணுவியல் மற்றும் டிரைவ்ஸ், அமைப்புசார் பொறியியல், வி.எல்.எஸ்.ஐ. வடிவமைப்பு பொறியியல், வணிக நிர்வாகத்துறை ஆகிய பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி செய்முறை ஆய்வகங்கள், அனைத்து துறைகளுக்கும் பொதுவான மைய நூலகம் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நூலகம் உள்ளன. இக்கல்லூரியின் அனைத்து இளநிலை துறைகளும், முதுநிலை கணினி துறையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நிரந்தரமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கல்லூரியின் கணினி துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைக்கு ஆராய்ச்சி மையத்துக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது. ஒவ்வொரு துறையிலும் பல நவீன வன்பொருள் மற்றும் மென்பொருட்களுடன் கூடிய ஆய்வகங்கள் உள்ளன. கல்லூரியில் குளிரூட்டப்பட்ட சிவந்தி கலையரங்கம், கருத்தரங்க அறைகள் உள்ளிட்ட பல நவீன கூடங்கள் உள்ளன.

100 சதவீத வேலைவாய்ப்பு

மாணவர்களின் வளர்ச்சிக்காக நல்ல முறையில் பயிற்சி அளிக்க, வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர பிரத்யேகமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு மாணவருக்கு ஒரு வேலை என்ற கோட்பாட்டுடன் 100 சதவீத வேலைவாய்ப்பை நோக்கி கல்லூரி பயணித்துக்கொண்டு இருக்கிறது.

கல்லூரியில் மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் உள்ளன. காற்றோட்டமான வளாகம், மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. விடுதி வளாகம் முழுவதும் இணைய வசதி மற்றும் கணிப்பொறி சேவை கொண்டுள்ளது.

இணைய வசதி

கல்லூரியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, திசையன்விளை, உடன்குடி, சாயர்புரம், சாத்தான்குளம், நாசரேத் ஆகிய இடங்களுக்கும், கல்லூரிக்கு அருகாமையில் உள்ள இடங்களுக்கும் 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கல்லூரி வளாகம் முழுவதும் இணைய வசதி செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச தரத்துக்கு இணையான கேண்டீன் வசதி உள்ளது.

கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகையும், விவசாய மற்றும் கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகையும் பெற வழிவகை செய்யப்படுகிறது.

மேலும் மாணவர்களுக்கு வங்கி மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர் சேர்க்கை

தற்போது கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெளிவான விளக்கமும், காணொலி காட்சியும் கொடுக்கப்பட்டு உள்ளது. அதை பார்த்து மாணவ-மாணவிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஒய்ஸ்லின் ஜிஜி தெரிவித்து உள்ளார்.

Next Story