கருணாநிதி மறைவையொட்டி அமைதி ஊர்வலம்: தொ.மு.ச.பேரவையினர் மொட்டை போட்டு அஞ்சலி


கருணாநிதி மறைவையொட்டி அமைதி ஊர்வலம்: தொ.மு.ச.பேரவையினர் மொட்டை போட்டு அஞ்சலி
x
தினத்தந்தி 8 Aug 2018 11:00 PM GMT (Updated: 8 Aug 2018 7:11 PM GMT)

முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி மறைவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதி ஊர்வலங்கள் நடைபெற்றன. தொ.மு.ச. பேரவையினர் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம்,

முன்னாள் முதல்–அமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவினால் காலமானதையொட்டி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மாலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

அத்தியாவசிய தேவை கருதி ஒருசில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. கருணாநிதி மறைவையொட்டி அனைத்து பகுதிகளிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்காரணமாக மாவட்டத்தில் எந்தவொரு சிறு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்ததால் மக்கள் வீடுகளிலேயே தங்கிவிட்டனர். இதனால் எந்த பகுதியிலும் மக்கள் நடமாட்டம் இல்லை என்ற நிலை காணப்பட்டது.

கருணாநிதி மறைவையொட்டி மாவட்டத்தில் 22–க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தி.மு.க.வினர் சார்பில் அமைதி ஊர்வலங்கள் நடைபெற்றன. ராமநாதபுரத்தில் அவை தலைவர் கோகுல முருகானந்தம் தலைமையில் தி.மு.க.வினரும், நகர் வர்த்தக சங்கம் சார்பிலும் அரண்மனை பகுதியில் இருந்து அமைதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்தது. முடிவில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். காலனியில் குடியிருந்து வரும் நரிக்குறவர்கள் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து கிளை டெப்போ முன்புறம் தொ.மு.ச.பேரவை சார்பில் கிளை செயலாளர் செல்வகுமார் தலைமையில் தலைவர் கண்ணன், பொருளாளர் நாகராஜ், உறுப்பினர்கள் ஆண்டிச்சாமி, பூபதி, செந்தில்குமார், ராஜேந்திரன் ஆகிய 7 பேர் கருணாநிதி மறைவையொட்டி மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினர்.

வழக்கமாக ராமநாதபுரத்தில் புதன்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். கருணாநிதி மறைவையொட்டி நேற்று ராமநாதபுரம் வாரச்சந்தை பகுதியில் கடைகள் அமைக்கப்படாமல் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில கடைகள் மட்டும் உள்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் மக்கள் வராததால் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் சீக்கிரமாக கிளம்பினர்.

ராமநாதபுரத்தில் பல தனியார் வேன்கள், கார்கள் போன்றவை ஒதுக்குப்புறமான இடங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ராமநாதபுரம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் பரவியது. ஆனால் அதுதொடர்பாக எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

சத்திரக்குடி பஸ் நிறுத்தத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். சத்திரக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. உப்பூர் அருகே மோர்ப்பண்ணை கிராமத்தில் தி.மு.க. தலைவர் மறைவையொட்டி மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. மேலும் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது.

சாயல்குடியில் தி.மு.க. அவை தலைவர் உதயசூரியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மவுன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல முன்னாள் மாவட்ட இளைஞரணி ராமர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, சாயல்குடி வர்த்தக சங்க தலைவர் முகமது அபுபக்கர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ், தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் முகமது அலி ஜின்னா உள்பட அனைத்து கட்சியினர், வணிகர் சங்க நிர்வாகிகள் மவுன ஊர்வலம் நடத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.


Next Story