மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மேற்படிப்பு தொடர முடியாததால் விபரீத முடிவு


மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மேற்படிப்பு தொடர முடியாததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 8 Aug 2018 10:45 PM GMT (Updated: 8 Aug 2018 9:17 PM GMT)

கீரிப்பாறை அருகே மேற்படிப்பு தொடர முடியாததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அழகியபாண்டியபுரம்,

கீரிப்பாறை அருகே தடிக்காரன்கோணத்தை அடுத்த காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் இமானுவேல், தொழிலாளி. இவருடைய மனைவி கில்டா ராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜோஸ்லின் (வயது 23), பி.ஏ. பி.எட். முடித்துள்ளார்.

படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட ஜோஸ்லின் மேற்படிப்பு தொடர எண்ணினார். தனது விருப்பத்தையும் பெற்றோரிடம் தெரிவித்தார். ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும், தனது மகளின் ஆசையை கடன் வாங்கியாவது நிறைவேற்ற வேண்டும் என்று இமானுவேல் நினைத்தார்.

இதற்காக ஜோஸ்லினின் பெற்றோர், பலரிடம் சென்று பண உதவி கேட்டனர். ஆனால் யாரிடம் இருந்தும் உதவி கிடைக்கவில்லை. தனக்காக பெற்றோர் பலரின் தயவை எதிர்பார்த்து நிற்பதை பார்த்து ஜோஸ்லின் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் மேற்படிப்பு தொடர முடியாதோ என்று மனதுக்குள் அழுது புலம்பினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் கில்டா ராணி மகளின் படிப்பிற்காக கடன் வாங்க வெளியே சென்றிருந்தார். இதனால் வீட்டில் ஜோஸ்லின் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு கில்டா ராணி வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் ஜோஸ்லின் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் துடித்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தூக்கில் துடித்துக் கொண்டிருந்த ஜோஸ்லினை மீட்டு அருகில் உள்ள தடிக்காரன்கோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ஜோஸ்லின் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், இதுபற்றி கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜோஸ்லின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேற்படிப்பு தொடர முடியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story