மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 Aug 2018 10:06 PM GMT (Updated: 8 Aug 2018 10:06 PM GMT)

திருப்பூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பலியானார். இது தொடர்பாக எலாஸ்டிக் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்,


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் பழனி புதிய ஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம்(வயது 43). திருப்பூர்-காங்கேயம் ரோடு குமாரசாமி காலனி 4-வது வீதியில் வசித்து வரும் இவர் தாராபுரம் ரோட்டில் எலாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் தென்னம்பாளையம் பள்ளி தெருவை சேர்ந்த வீரமணி(29) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நிறுவனத்தில் உள்ள எந்திரங்களை வீரமணி சுத்தம் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக எந்திரத்தில் இருந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதைப்பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் வீரமணியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில், அவர் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் எந்திரத்தை சுத்தம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு உபகரணங்களை கொடுக்காமல் பணியாளரை வேலை செய்ய வைத்ததாக எலாஸ்டிக் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான செய்யது இப்ராஹிம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story