கருணாநிதி மறைவு: சென்னையில் பஸ்-ஆட்டோக்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு


கருணாநிதி மறைவு: சென்னையில் பஸ்-ஆட்டோக்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 10:45 PM GMT (Updated: 8 Aug 2018 10:19 PM GMT)

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னையில் நேற்று பஸ்-ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கவலை தோய்ந்த முகத்தோடு வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னையில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.

சென்னையின் அங்காடித்தெரு என்று அழைக்கப்படும் தியாகராயநகர் ரெங்கநாதன் தெரு, பாண்டி பஜார், பர்மா பஜார், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், சைதாப்பேட்டை, பெரம்பூர், பழைய வண்ணாரப்பேட்டை, அமைந்தகரை, கோயம்பேடு, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஜவுளி கடைகள், பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இதனால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

அதே சமயத்தில் பால், தோசை மாவு உள்பட சில அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கொடுங்கையூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்பட பல்வேறு இடங்களிலும் காலையில் சிறிது நேரம் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் உயிர்காக்கும் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்து கடைகள் திறந்திருந்தன.

அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் நேற்று பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல ஆட்டோக்கள் மற்றும் தனியார் கால் டாக்சிகளும் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகினர்.

கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தமட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னையை பொறுத்தமட்டில் ஒட்டுமொத்தமாக கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் அலுவலகங்கள், கம்பெனிகளுக்கு பணிக்கு செல்வோர் வீட்டிலேயே முடங்கினர்.

இதனால் வழக்கமான நாட்களில் வாகனங்களால் விழி பிதுங்கும் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வெறிச்சோடியது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டதையடுத்து கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டன. மேலும் பஸ், ஆட்டோக்களும் ஓடத்தொடங்கின. இதையடுத்து இயல்பு நிலை திரும்பியது.

Next Story